police1

கடந்த மாதம் 16ந்தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நகர ஊரமைப்பு இணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர், மின்பராமரிப்பு செயற்பொறியாளர், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையிலான குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 14 சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குழுவினர் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் இடவசதி, கட்டிட வசதி, சுகாதாரம், மாணவர்களின் பாதுகாப்பு வசதி, பள்ளி பதிவேடுகள், மாணவர்சேர்க்கை, மாணவர் சேர்க்கை கட்டண விபரம் உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்தினார்கள். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளை ஆய்வு செய்ததற்கான அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் அளிக்க உள்ளனர்.