
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலை சரி செய்வதற்காக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை தமிழக அரசின் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி சிக்களால் சில மாதங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை. அதனால் ஊழியர்கள் வங்கிக் கடன் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் உள்ளிட்ட அன்றாட செலவுக்குக் கூட பணம் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர் என்றும் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் துணைவேந்தர் குழு உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு மே மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு பல்கலைக்கழகத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. இது லாபம் சம்பாதிக்க தொழிற்சாலை அல்ல. பல்கலைக்கழகத்திலிருந்து ஊழியர்களை பணி நிரவல்களுக்கு அனுப்பக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வியை சந்தித்து சம்பளம் வழங்குவது குறித்து அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் 5ஆம் தேதி சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்று போராட்டத்தை விலக்கி கொண்டனர். அதே நேரத்தில் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்க நிர்வாகி மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஊழியர் விரோத போக்கை கடைப்பிடிக்கிற உயர் கல்வித் துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தவறான நடவடிக்கை மேற்கொள்வதற்காக, கடந்த 4 நாட்களாக சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதை ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் கடந்த 8 மாதமாக கிடைக்கவில்லை, இறந்து போன ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் கிடைப்பதில்லை, பல்கலைக்கழகத்தில் தவறு நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தான் தண்டிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வேலை செய்யும் அனைத்து ஊழியர்களை தண்டிக்க கூடாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் மேற்பட்ட மிகப்பெரிய நிர்வாகம், இவற்றை சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிக்க வேண்டாம்” என தெரிவித்தார்.