ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியர் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்க்க உதவும் புத்தகங்களைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தோறும் நூலகம் அமைத்து மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிப்பதைப் பரவலாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தனியாக ஒரு வகுப்பறை ஒதுக்கி நூலகம் அமைத்து அதற்கென க.வளர்மதி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமித்து மாணவர்களிடம் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 647 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நூலகத்திற்கு நாவல்கள், சிறுவர் நூல்கள், வரலாறு, தமிழ், ஆங்கிலம், அறிவியல் மற்றும் போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்களை அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இப்பள்ளியில் உயிரியல் ஆசிரியராகப் பணிபுரியும் அ.சங்கரகோமதி இந்தாண்டு பணி ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு, மாணவர்கள் படித்துப் பயன்பெறவும், தன்னம்பிக்கை வளர்க்கவும் உதவும், ரூபாய் ஆறாயிரம் மதிப்புள்ள அப்துல்கலாம், இறையன்பு, சைலேந்திரபாபு, கவிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் எழுதிய 30 புத்தகங்களை பள்ளி நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். புத்தகங்களைப் பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி, நூலகப் பொறுப்பாசிரியர் க.வளர்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.