Skip to main content

மாணவனை ஏமாற்றிய ஆசிரியர்... மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Teacher who cheated student ... Police arrested those involved in fraud

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயது பிரகாஷ். இவர் வேப்பேரி அரசுப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டில் படிக்கும் போது அங்கு அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் வானூர் தாலுகா நாவல்குளம் என்ற ஊரைச் சேர்ந்த ராமசாமி. இவருக்கு மாணவர் பிரகாசுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது . இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாஷை தற்செயலாகச் சந்தித்த ஆசிரியர் ராமசாமி, ‘பிரகாஷ் நீ பிடெக் படித்து முடித்துவிட்டு வருமானம் இல்லாமல் வீட்டில் இருக்கிறாயே அதனால் உனக்கு வருமானத்திற்கு வழி செய்கிறேன் என்று கூறியுள்ளார் ஆசிரியர் ராமசாமி.

 

நான் சில நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன் என்னுடன் சேர்ந்து தொழில் செய்ய வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்”. அதன் பின்பு முருக்கேரியில் உள்ள ஒரு தனியார் கணினி மையம் நடத்தி வரும் காஞ்சிபுரம் பாண்டவர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் விழுப்புரம்  கோலியனூர் கண்ணன் மனைவி கவுசல்யா, அவரது மகன் கவியரசு ஆகியோரை பங்குதாரராகக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக அவர்களை பிரகாஷுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் பிரகாசிடம் எங்கள் நிறுவனம் பல இடங்களில் நிலங்களை வாங்கி அதை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறோம்.

 

அதன் மூலம் எங்களுக்குப் பல லட்சங்கள் லாபம் கிடைக்கிறது. அதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 18000 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அவர்களது பேச்சை நம்பிய பிரகாஷ் தன்னுடன் தனக்குத் தெரிந்த 25 நபர்களை அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களிடம் இருந்து 2 கோடியே 63 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து அந்த நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் பிரகாஷ் உள்ளிட்ட 26 பேருக்கும் அவர்கள் கூறியபடி மாதம்தோறும் பணம் தராமல் ஏமாற்றி வந்ததோடு ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. மேலும் தனக்கு ஆசிரியராக இருந்தவரே மோசடியில் ஈடுபட்டு உள்ளதைக் கண்டு நொந்துபோன பிரகாஷ் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோசடியில் சம்பந்தப்பட்ட சக்திவேல், கௌசல்யா, ஆசிரியர் ராமசாமி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கௌசல்யாவின் மகன் கவியரசை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைதாகியுள்ள ஆசிரியர் ராமசாமி தற்போது மயிலம் அருகே உள்ள பாதிரிப்புலியூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் தன்னிடம் படித்த மாணவனை நம்ப வைத்து மோசடி செய்துள்ள ஆசிரியர் மற்றும் அந்த கும்பல் இதுபோன்று பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.