Skip to main content

கல்லூரிப் பேருந்து மோதி பள்ளி ஆசிரியை தலை நசுங்கி பலி!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Teacher passed away in college bus collision

 

வீரகனூர் அருகே, தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக பலியானார்.  கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள சிறுவாகம்பூரைச் சேர்ந்தவர் செல்வமணி (34). இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி சத்தியபிரியா (23). இவர், உள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஏப். 20 ஆம் தேதி, சத்தியபிரியா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீ.ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார். குழந்தைகளை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தான் பணியாற்றும் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றார்.    

 

வீரகனூரை அடுத்த புளியகுறிச்சி பிரிவு சாலையில் ஒரு திருப்பத்தில் வாகனத்தை அவர் திருப்பினார். அப்போது தலைவாசலில் உள்ள ஒரு  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து, சத்தியபிரியா ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கிய சத்தியபிரியா, நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கீழே குதித்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியபிரியாவின் உறவினர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். மகளின் சாவுக்குக் காரணமான கல்லூரி பேருந்து ஓட்டுநரை உடனடியாக கைது செய்யக்கோரி, தலைவாசல் - வீரகனூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீரகனூர் காவல்நிலைய எஸ்ஐ அந்தோணி மைக்கேல் தலைமையிலான காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜும் அங்கு விரைந்தார். அவரும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் பேசினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூராய்வு முடிந்த பிறகு சத்தியபிரியாவின் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  சத்தியபிரியாவின் மரணத்துக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் உரிய இழப்பீடு வழங்கக்கோரி, உறவினர்கள் மீண்டும் தலைவாசல் வீரகனூர் தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தைக் கிடத்தி வைத்து மறியலில் ஈடுபட்டனர். 

 

இதனால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டனர். சத்தியபிரியாவின் சடலம், அவருடைய கணவரின் சொந்த ஊரான கடலூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே, விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் குமரேசனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தையொட்டிய உறவினர்கள் மறியல் போராட்டத்தால் கெங்கவல்லி, வீரகனூர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.