Skip to main content

மாணவனின் கையை உடைத்த ஆசிரியர்... தனியார் பள்ளியில் கொடூரம்! 

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

The teacher who broke the student's hand; Atrocities in private school!

 

சேலத்தில் உள்ள பிரபல தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில், பாடவேளையில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவனின் கையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி என்ற தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில், சேலம் குரங்குச்சாவடியைச் சேர்ந்த சுபத்ரா என்பவரின் மகன் சர்வேஷ் (15), பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இவருடைய தங்கையும், இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். 

 

சிறுவன் சர்வேஷ் இடக்கை பழக்கம் உள்ளவர். இந்நிலையில், டிசம்பர் 6ம் தேதியன்று, சர்வேஷ் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை சக மாணவர் ஒருவர் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சர்வேஷ், அந்த குடிநீர் பாட்டில் தன்னுடையது என்று கூறி அவரிடம் இருந்து பிடுங்க முயற்சித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

 

பாடவேளையில் மாணவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஆங்கில பாட ஆசிரியர் லூர்து ஆண்டனி என்பவர், மாணவர் சர்வேஷிடம் என்ன ஏதென்று விசாரிக்காமலேயே அவனுடைய இடக்கையைப் பிடித்து வேகமாக முறுக்கியிருக்கிறார். 

 

சர்வேஷ் வலியால் துடித்து அழுததால் ஆசிரியர் அந்த வகுப்பறையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது சர்வேஷின் இடக்கை பெரிதாக வீக்கமடைந்துள்ளது. இதைப் பார்த்த அவனுடைய தாயார் சுபத்ரா, அதிர்ச்சியடைந்தார். மகனிடம் விசாரித்தபோது, பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக அவர், மகனை அழைத்துச் சென்று கருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தார். மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுவனின் இடக்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆசிரியர் லூர்து ஆன்டனி கையைப் பிடித்து முறுக்கியதால்தான் மகனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

 

உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் கட்டு போட்டுவிட்டனர். சிறுவனின் கையில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதற்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவு செய்ததாக சொல்லப்படுகிறது. 

 

ஆசிரியரின் காட்டுமிராண்டித்தனத்தால் மகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். விரைவில் சி.பி.எஸ்.இ. வாரியத் தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், மகனைத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றதோடு, சிகிச்சை செலவுகளையும் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். விவகாரம் பெரிதாகாமல் இருப்பதற்காக, பள்ளி நிர்வாகமும் அப்போதைக்கு இதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

 

அதனால், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் பள்ளி மீதும், ஆசிரியர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்காமல் தவிர்த்துவந்தனர். பள்ளி நிர்வாகமும் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கப் பார்த்தது. இதற்கிடையே, சர்வேஷின் வகுப்பு மாணவர்கள் மூலம் இந்த விவகாரம் மெதுவாக வெளியில் கசியத் தொடங்கியது.

 

இதையடுத்து, சர்வேஷின் பெற்றோர் டிச. 9ஆம் தேதியன்று, சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி ஆசிரியர் லூர்து ஆன்டனி மீது புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, பள்ளி நிர்வாகமும் அந்த ஆசிரியரைப் பணியிடைநீக்கம் செய்துள்ளது. 

 

இச்சம்பவம் குறித்து செந்தில் பப்ளிக் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் சுந்தரேசனிடம் டிச. 9ம் தேதி இரவு கேட்டபோது, ''நீங்கள் குறிப்பிடும் சம்பவம் குறித்து இன்றுதான் எனக்குத் தெரியவந்தது. ஆனாலும் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரிக்கவில்லை. தற்போது, திருமண விழாவுக்காக வெளியூர் செல்கிறேன். ஊர் திரும்பியவுடன் விசாரித்து பதில் சொல்கிறேன்” என்றார். அதன் பின்னர் நம்முடைய செல்ஃபோன் லைனுக்கு அவர் வரவே இல்லை. 

 

இதையடுத்து, நாம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, “செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளி தரப்பில் அறிக்கை கேட்டிருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகுதான் நம் தரப்பில் விசாரணையை தொடங்க முடியும்'' என்றார். 

 

மீண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் டிச. 10ஆம் தேதி தொடர்பு கொண்டபோது, ''மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த ஆசிரியரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தரப்பிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

 

அரசுப் பள்ளிகளில், புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது விளக்கக் கேட்பு குறிப்பாணை கூட வழங்காமல் எடுத்த எடுப்பிலேயே பணியிடைநீக்க நடவடிக்கை எடுப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் மீது ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். 

 

மற்றொருபுறமோ, பிரபலமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சிறுவனின் கை எலும்பு முறிக்கப்பட்ட சம்பவம் நடந்தும்கூட முறையான, விரைவான விசாரணை நடத்தாமல் பள்ளி நிர்வாகத்தை மயிலிறகால் தடவிக் கொடுப்பதாகவும் அவர் மீது விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.