கும்பகோணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியரை மாணவர்கள் வழிமறித்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் ஸ்ரீநகர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் கல்யாணசுந்தரம். இவர் அந்த அப்பள்ளியில் உயிரியல் துறை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு மாணவனின் பிறந்த நாளை பள்ளி வளாகத்தில் அந்த பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதை பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்து, பள்ளியின் முதல்வர் கவனத்திற்கும் எடுத்து சென்றுள்ளார்.
இதனால் கோபத்தில் இருந்த மாணவர்கள் ஆசிரியர் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் வரை பள்ளியின் வெளியே காத்து கொண்டு இருந்துள்ளார்கள். பள்ளி முடிந்து ஆசிரியர் கல்யாண சுந்தரம் வெளியே வந்தவுடன் அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதில் ஆசிரியரின் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.