Skip to main content

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மீது ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் மணியன் மீது ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளது.
 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டம் 2013 இயற்றப்பட்டு முதல் துணைவேந்தராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றியவர் டாக்டர் எஸ்.மணியன். கடந்த மே மாதம் 27ந் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவர் பணி ஓய்வு பெற்றார். இதனால் புதிதாக துணைவேந்தரை அமைக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் புதிய துணைவேந்தரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அம்பேத்கர் ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.எஸ்.குமார், நீதிவளவன் உள்ளிட்டோர்  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குமார் கூறியதாவது. 

பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். பல்கலைக்கழக முறைகேடுகளை சரிசெய்ய தமிழக அரசு நிர்வாக அதிகாரியை அமைத்தது. அதன் பிறகு துணைவேந்தராக டாக்டர் மணியன் நியமிக்கப்பட்டு அவரது பதவிக்காலமும் முடிந்து விட்டது.
 

The teacher association accusations against Dr. Manian



 
இந்நிலையில் முந்தைய துணைவேந்தர் மணியனே மீண்டும் துணைவேந்தராக வருவதற்காகன முயற்சிகளை எடுத்து வருவதாக அறிகிறோம். மீண்டும் அவர் வந்தால் பல்கலைக்கழகத்தில் ஒன்றுமே இருக்காது. அரசு சொன்ன எதையுமே அவர் பணிக்காலத்தில் செய்யவில்லை. பணி ஓய்வு பெறும் நிலையிலும் விதிகளை மீறி பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார். இதை தட்டிக் கேட்ட ஆசிரியர் சங்கங்களை பிரித்தாளுகிறார்கள். மேலும் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழக அரசு பணியிடங்களுக்கு செல்லும் ஊழியர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள மாவட்டத்திலும், பணம் கொடுக்காமல் கேள்வி கேக்கும் ஊழியர்களை தமிழகத்தின் கடைகோடியில் தூக்கியடித்துள்ளனர்.

ஊழியர்களை பணிமாறுதல் தொடர்பாக கலந்தாய்வு மூலம்  செய்யுங்கள் என்று பல முறை கோரிக்கை விடுத்தோம் அதனை ஏற்காமல் பணமே குறிக்கோளகச் செயல்பட்டு துணைவேந்தராக இருந்த மணியன் தற்போது பதிவாளர் பணியில் உள்ள ஆறுமுகம் ஆகியோர்கள்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவர்கள் இருவருமே துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஊழல் வாதிகளை துணைவேந்தராக நியமிக்க கூடாது. தொலைதூரக் கல்வி மையத்தின் பாடப்பிரிவுகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தனியாருக்கும் உறவினர்களுக்கும் தாரை வார்த்து, நிதி இழப்பை மணியன் மற்றும் பதிவாளர் ஆறுமுகம் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். 
 

நீதிவளவன் கூறுகையில், துணைவேந்தராக இருந்த மணியன், பதிவாளர் பொறுப்பு வகிக்கும் ஆறுமுகம் உள்ளிட்டோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். பணியிட மாறுதல், புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவு முறைகேடு நடந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் ரோஸ்டர் முறை கடைபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் மீது நீதி விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும். இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவில் தமிழக ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என்றார். தமிழக ஆளுநரை சந்தித்த பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடவும், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.