Skip to main content

பணிநிரந்தரம் செய்ய மேலும் 200கோடி! 15 ஆயிரம் சம்பளம் தர மேலும் ரூ.100 கோடி! பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!  

Published on 16/07/2019 | Edited on 17/07/2019

 

கடந்த  26.08.2011-ல் அரசுப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் கல்வி இணைச் செயல்பாடுகளும் நடத்திட ஏதுவாக உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி பாடப்பிரிவுகளை சேர்ந்த 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 2012 - ஆம் ஆண்டு நியமனமும் செய்யப்பட்டனர்.  ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றும் அவர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர். 

 

e

 

 

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-   "பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் வெளியிடப்பட்டு பகுதிநேர ஆசிரியர்கள்  2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

 

இது அதிமுக அரசின் ஓராண்டில் நூறாண்டு சாதனைகளில் ஒன்றாக சேர்த்து சாதனை மலராக வெளியிடப்பட்டது. இவர்களுக்கு முதல் முறையாக 2014- ஆம் ஆண்டு ரூ.2ஆயிரம் சம்பள உயர்த்தி தரப்பட்டது. இந்த ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வானது ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவை தொகையுடன் வழங்கப்பட்டது. இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இதன் பின்னர் 14-வது சட்டசபை காலம் முடியும்வரை வேறெந்த சம்பள உயர்வையும் அறிவிக்கவில்லை.   8 ஆண்டுகளில் ரூ.2,700 மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

 

15- ஆவது சட்டசபைக்கு தேர்தல் நடந்து மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைத்தது. துரதிஷ்டவசமாக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இதன் பின்னர்  முதல்வராக தேர்வான ஓ.பன்னீர்செல்வம் 3 மாதத்தில் ராஜிநாமா செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி தற்போது 30 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறார். இவரது காலத்தில் முன்புபோல 40 சதவீத சம்பள உயர்வோ, ஏப்ரல் முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையோ வழங்காமல் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 10 சதவீத சம்பள உயர்வாக ரூ.700 மட்டுமே தரப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. இதனால் தற்போது ரூ.7ஆயிரத்து 700 தொகுப்பூதியம் தரப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரத்து 700 சம்பள உயர்வு மிகவும் குறைவானது. 

 

ரூ.7ஆயிரத்து எழுநூறு குறைந்த சம்பளத்தில் பணியாற்றும்போது 8 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம். ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் மறுக்கப்பட்டு வருவதும், ஒருமுறைகூட போனஸ் தரமால் இருப்பதும், விடுப்பு சலுகைகள் வழங்காததால் சம்பள பிடித்தம் செய்வதும், இறந்து போன ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியில் இருந்து குடும்பநலநிதி வழங்காமல் இருப்பதும், 58 வயதை எய்து பணிஓய்வு பெற்றவர்களுக்கு குடும்பநலநிதி எதுவும் வழங்காமல் இருப்பதும், நிரந்தரப் பணி நியமனங்களில் எங்களையே நியமிக்காமல் குறைந்தபட்சம் முன்னுரிமைகூட தராமல் இருப்பதையும் அரசு கவனமுடன் தீர்வுகாண முன்வரவேண்டும். 

e

7வது ஊதியக்குழு புதிய சம்பள உயர்வு மறுப்பு தொகுப்பூதியதாரர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வானது 10 சதவீதம் வழங்கப்படுவது சரிவர தரப்படவில்லை. வருடாந்திர  10 சதவீத சம்பள உயர்வு தரப்பட்டு இருந்தால் இந்நேரம் சம்பளம் ரு.10ஆயிரம் கிடைத்திருக்கும். இதனிடையே 7-வது ஊதியக்குழு அரசாணைப்படி திட்டவேலையில் பகுதிநேர தொகுப்பூதிய வேலையில் உள்ளவர்களுக்கும் 30 சதவீதம் சம்பள உயர்வை வழங்கி இருந்தால் 15 ஆயிரம்வரை கிடைத்திருக்கும்.

 

4 ஆயிரம் காலிப்பணியிட நிதி மேலும் 16ஆயிரத்து 549 பணியிடங்களில் மரணம், 58 வயதால் பணிஓய்வு, வேறு பணிக்கு சென்றதால் பணி ராஜிநாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள 4 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியினை தற்போது பணிபுரிந்துவரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பகிர்ந்து வழங்கினால் அரசுக்கு நிதி இழப்பு வராமலே ரூ.15 ஆயிரம்வரை சம்பளம் கொடுக்க முடியும்.  

 

ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களின்போது அரசின் உத்தரவின்படி பள்ளிகளை திறந்து நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யும்வரை குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரம் சம்பளமாவது வழங்குவதே அரசு எங்களுக்கு செய்யும் கைமாறாகும். 

 

பணி நிரந்தரம் செய்ய மேலும் ரூ.200கோடி /ரூ.15 ஆயிரம் சம்பளம் தர மேலும் ரூ.100கோடி தற்போது தரப்படும் தொகுப்பூதியமான ரூ.7ஆயிரத்து எழுநூறு தருவதற்கு அரசுக்கு சுமார் ரூ.115 கோடி செலவாகிறது. இதனை உயர்த்தி ரூ.15 ஆயிரமாக தருவதற்கு மேலும் ரூ.100 கோடி ஒதுக்கினால் போதும்.


 அதேவேளையில் எங்களை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணிநிரந்தரம் செய்ய மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது. இதனை அரசு 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட உடனடியாக பரிசீலித்து வழங்க முன்வரவேண்டும்.

மத்திய அரசின் திட்ட வேலையில் எங்களின் பணிநியமன அறிவிப்பை 110ன்கீழ் அறிவித்ததோடு சரி. இதுவரை நடந்திட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்களில் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து ஒருமுறைகூட அறிவிக்காமல் உள்ளது எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்துகிறது. எனவே இம்முறையாவது 9 ஆண்டுகால எங்களின் பணியை அங்கீகரித்து பணிநிரந்தரமோ அல்லது ரூ.சம்பளத்தை ரூ.15ஆயிரமாக வழங்கவோ 110ன் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; தேர்வு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
4000 Assistant Professor posts; Exam Notification


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.