Skip to main content

குடிப்பழக்கத்தால் அவலத்தைச் சந்திக்கும் குடும்பங்கள்!- சாம்பிளுக்கு விருதுநகர் மாவட்டம்! 

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

tasmac liqour peoples virudhunagar district police

 

குடிப்பழக்கத்தால் தினந்தோறும் என்னென்ன விபரீதங்கள் நடக்கின்றன தெரியுமா? விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. 


சம்பவம் 1

ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ள பெட்டிக்கடை முன்பாக நின்றபோது, அங்கு வந்த மாரிச்செல்வம் என்ற குட்லக், “எனக்கு பிராந்தி வாங்கிக்கொடு” என்று மிரட்டியிருக்கிறார். அதற்கு முத்துக்குமார் ‘நான் ஏன் உனக்கு பிராந்தி வாங்கிக் கொடுக்கணும்? உனக்கு வேணும்னா நீ போய் வாங்கிக்குடி.” என்று கூறியிருக்கிறார். தன்னுடன் ஒன்றாகச் சேர்ந்து குடிக்கும்  முத்துக்குமார் இப்படிச் சொன்னவுடன்  கோபமான மாரிச்செல்வம், அங்கு கிடந்த கம்பியை எடுத்து முத்துக்குமாரின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்க, அருகில் நின்றவர்கள் மாரிச்செல்வத்தைக் கண்டித்து அங்கிருந்து போகச் சொல்லியிருக்கின்றனர். ஆனாலும் மாரிச்செல்வம் அடிபட்ட முத்துக்குமாரைப் பார்த்து “நான் எப்ப கேட்டாலும் பிராந்தி வாங்கிக் கொடுக்கணும். மாட்டேன்னு சொன்னா கொல்லாம விடமாட்டேன்.”என்று மிரட்டிவிட்டே சென்றுள்ளார். முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் மாரிச்செல்வம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது. 

சம்பவம் 2

கூமாபட்டி, அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன். தேங்காய் வெட்டும் கூலி வேலை பார்த்துவந்த இவர் குடும்பத்தைக் கவனிக்காமல், சம்பளத்தையும் வீட்டுக்குத் தராமல், தினமும் குடித்தே செலவழித்திருக்கிறார். மனைவி சுந்தரம்மாள் “தினமும் இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே. நான் செலவுக்கு என்ன பண்ணுவேன்.” என்று எப்போதும்போல் கணவரைத் திட்டியிருக்கிறார். அதற்கு மாரியப்பன் “ரெண்டு வருஷமா தீராத வயித்து வலில கஷ்டப்படறேன். ஆஸ்பத்திரிக்கு போயும் குணமாகல. நான் உசிரோட இருந்து என்ன பண்ணப்போறேன்.” என்று கூறியிருக்கிறார். குடியினால் கணவருக்கு ஏற்பட்ட உடல் உபாதையை உணர்ந்த சுந்தரம்மாள் “மொதல்ல குடிக்கிறத விடுங்க.. எல்லாம் சரியாயிரும். மருந்த குடிங்க, குணமாயிரும்.”என்று சொல்லிவிட்டு, தன் மகளுடன் படுக்கச் சென்றுவிட்டார். காலையில் 05.00 மணிக்கு கணவரை எழுப்பச் சென்றபோது, தகரக்கொட்டகையில் உள்ள இரும்புக்கம்பியில் சேலையால் தூக்கிட்டு மாரியப்பன் தொங்கியிருக்கிறார். அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் அரசு மருத்துவர். மாரியப்பனின் இறப்பு குறித்து கூமாபட்டி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. 

சம்பவம் 3  

அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். சொந்தமாக மரக்கடை வைத்திருக்கும் இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். இவர், தன் மனைவி ஜானகியிடம் மரக்கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு கணவரைப் பார்க்க ஜானகி சென்றபோது, அங்கே படுக்கையில் வாந்தி எடுத்தநிலையில் கிடந்திருக்கிறார். அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு முதலில் கொண்டுபோய், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் அசோக்குமார் இறந்துபோனார். எம்.ரெட்டியபட்டி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

மதுவால் இதுபோன்ற சம்பவங்கள் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருவது வேதனைக்குரியது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“எடப்பாடி அண்ணன் எப்பவும் அழகா சிரிப்பாரு” - விஜயபிரபாகரன் ஐஸ் மழை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Edappadi Annan will always have a beautiful smile Vijaya Prabhakaran Ice rain

சிவகாசியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருதுநகர் பாரளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (28.03.2024) நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றியனார். இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசுகையில், “இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம். எங்க அப்பா கேப்டன் விஜயகாந்த் விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம்.. எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுப்போச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

அப்போ இது யாரோட ஆசை,  கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு. ஆண்டவர் சொல்லிருக்காரு போல. நிறைய பேர் சொன்னாங்க. விஜயபிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு?. பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு. ராமானுஜபுரத்துலதான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி, பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்கதான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப்  பெருமையா நினைக்கிறேன்.

விஜயகாந்த் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றுருக்காருன்னு. என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படனும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது, அ.தி.மு.க. எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல. ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான், கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதேமாதிரி அ.தி.மு.க.வுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க.

எனக்கு உள்ள வரும் போது தே.மு.தி.க., அ.தி.மு.க. எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதுனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன். இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள்தான் ஜாஸ்தி. இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018இல் விஜயகாந்த் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல, அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளாரா உங்க முன்னாடி பேசும் போது, ரொம்ப சந்தோஷம் அடையறேன்.

இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்ன்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை, தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு. அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதுனால அந்த வார்த்தை தெரியும், சிவகாசிதான் சின்ன ஜப்பான்ன்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா. அவ்ளோ திறமைசாலிகள், வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு சைனா  ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு, நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு, உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வுகாண முடியும். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியின் முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் விஜயகாந்த் மகனா, எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” எனப் பேசி சைகைகளால் முரசு கொட்டினார் விஜயபிரபாகரன்.