Invisible 'Tasmac' under Corona control

தமிழகத்தில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, ஷாப்பிங் மால் உட்பட பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வர இ-பதிவு வாங்கும் முறை தொடரும். திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10ஆம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்படுகிறது. ஏப்.10ஆம் தேதியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி;நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து தமிழக வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காணொலி மூலமாகஅவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு வாரத்திற்குள் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிசெலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் எனஅரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. சென்ற ஆண்டு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அரசின் கண்களில் இருந்து தப்பியுள்ளது டாஸ்மாக்.