Skip to main content

டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் போலி மதுபானம்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tasmac is a fake liquor sold in bars

தமிழ்நாட்டில் உள்ள பார்களில் போலி மது விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. போலி மது தயாரிப்பு கும்பல்,  டாஸ்மாக் கடைகளில் வாங்கி பாரில் மதுவை விற்கும் போது பாட்டிலுக்கு ரூ.50 தான் லாபம் கிடைக்கும். ஆனால், எங்க சரக்கை விற்றால் ஒரு பாட்டிலுக்கு ரூ.100 லாபம் கிடைக்கும் என்று டாஸ்மார்க் பார்களை அனுகி ஆசை வார்த்தை கூறி அணுகுகின்றனர். இந்த கும்பலே எசன்ஸ் ஊற்றி கலந்த மதுவை குவாட்டர், ஆஃப் பாட்டில்களில் தனித்தனியாக அடைத்து, சம்பந்தப்பட்ட பாட்டில்களில் உள்ள நிறுவன பெயரிலேயே லேபிளை ஒட்டி புதிதாக மூடி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி ஒரிஜினல் மதுபோலவே தயார்படுத்துகின்றனர். பின் அந்த பாட்டில் மதுவை ரூ.50க்கும், ரூ.80க்கும் மொத்தமாக விறபனை செய்கின்றனர். இதனால் டாஸ்மாக் விற்பனை குறைந்து போலி மது விற்பனை அமோகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் போலி மது செய்து விற்கும் கும்பல் குறித்து சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, மது தயாரிப்பு கூடம் காலியாக இருந்திருக்கிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சென்னை (மதுரை) மண்டல நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி காசிவிஸ்வநாதன், திருச்சி மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் பல நாட்களாக நடத்திய ரகசிய விசாரணையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூரில் அந்த கும்பல் விற்பனையைத் தொடங்கியுள்ளது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் சங்கர், மச்சுவாடி மாரிமுத்து என அடுத்தடுத்து 3 பேரையும் சரக்கு பாட்டில்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் மற்றும் ஓட்டுநரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவகங்கையில் எடுத்து வந்த போலி மது தயாரிக்கும் மூலப்பொருட்களான எசன்ஸ், லேபிள், ஸ்டிக்கர், மூடிகள், மூடிகளை லாக் செய்யும் மெசின், ஸ்பிரிட் ஆகியவை புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு விவசாயியின் தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தோட்டத்தில் ஆய்வு செய்த போது 4 பேரல் ஸ்பிரிட் மற்றும் அனைத்து மூலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைப்பற்றி ஒரு சரக்கு வேனில் ஏற்றி பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.