தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக போடப்பட்ட தடை உத்தரவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் மது பிரியர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கடைகளின் பூட்டை உடைத்து சுவற்றில் துளை போட்டு மது பாட்டில்கள் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை ஆங்காங்கே உள்ள தமிழ்நாடு சிறு சேமிப்பு கிடங்கு இருக்கும் இடத்திற்கு இட மாற்றம் செய்து வருகிறது. இதனடிப்படையில் விழுப்புரம் ஜானகிபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த மது பாட்டில்களை லாரியில் சிறுசேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த மது பிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு மதுபாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படிக் கடையை முற்றுகையிட்டு மதுபாட்டில்கள் கேட்டு தகராறு செய்தனர்.இவர்களைக் கட்டுப்படுத்த முடியாத டாஸ்மாக் ஊழியர்கள் காவல்துறையை வரவழைத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் மது பிரியர்களைக் கலைந்து செல்லுமாறு எடுத்துக்கூறியும் கேட்காமல் பிரச்சனை செய்தனர்.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அந்தக் கும்பலை விரட்டி அடித்தனர்.அப்போது மதுபாட்டில் கேட்பதற்காக இந்தக் கும்பலில் வந்த பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் (65-வயது) இவரும் அங்கு வந்துள்ளார்.போலீஸ் துரத்தியதும் எல்லோரும் கலைந்து ஓடும் போது ராஜாராம் அங்குள்ள ஒரு கல்லில் கால் இடரி விழுந்துபோனார். அவரை போலீசார் உடனே ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாராமை பரிசோதனை செய்த டாக்டர்கள்,அவர் இறந்து போனதை உறுதி செய்தனர்.மதுவின் மீதான ஆசை, மது பிரியர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. இதனால் ஒரு உயிர் பிரிந்துள்ளது.
என்று தணியுமோ இந்த மதுவின் மோகம்!