சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், தூக்குதண்டனைக் குற்றவாளி தஷ்வந்த் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த வருடம் சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி திடீரென காணாமல் போனார். பின்பு அவரை அந்தப்பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் கடத்தி வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார். இந்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கொலையாளி தஷ்வந்த்திற்கு தூக்குத்தண்டனை அறிவித்து தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது தஷ்வந்த் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தங்களுடைய தரப்பை முழுமையாக விசாரிக்காமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் சாட்சி தரப்புகள் முறையான விதிப்படி கையாளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பை நிராகரிக்ககோரி அந்த மனுவில் தஷ்வந்த் வேண்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விமலா மற்றும் ராமதிலகம் அமர்வு இந்த மனு தொடர்பாக நான்கு வாரத்தில் போலீசார் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.