Skip to main content

தொடரும் கொலைகள்... நடுங்கும் பொதுமக்கள்... அலட்சியம் காட்டும் காவல்துறை அதிகாரிகள்..!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Tanjore SP should take strong action

 

தஞ்சை மாவட்டம், காவல் சரக பகுதிகளில் சமீப நாட்களாக கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கத்துவங்கி இருக்கிறது. "உப்புக்கு புரியோஜனம் இல்லாத விவகாரங்களுக்குகூட கொலையா" என பொதுமக்கள் குலை நடுங்கும் அளவிற்கு மாவட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கிடக்கிறது.

 

கொலைகள் சர்வதாரனமாக  நடப்பதற்கு காவல்துறையின் அலட்சியமும், மாவட்ட காவல் கண்கானிப்பாளரின் கவனமின்மையுமே காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள் விவரம் அறிந்த சில வழக்கறிஞர்கள். அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது சோழபுரம் கொலை.

 

தஞ்சை மாவட்டம் சோழபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன்கள் அருண்குமார், அரவிந்தன் சொந்தமாக கார்வைத்துக்கொண்டு டிராவல்ஸ் நடத்துகின்றனர். அதோடு அப்பகுதியில் மீன்குட்டை வைத்திருக்கிறார்கள்.

 

பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட் சில நாட்களுக்கு முன்பு திருட்டு போயிருக்கிறது, சோழபுரம் ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த காரல் மார்க்ஸ், நரேஷ், ராஜேஷ், சதீஷ் ஆகியோர் தான் தனது இரும்பு கேட்டை திருடியதாக சந்தேகித்த பூமிநாதன் திருப்பனந்தாள் போலீசில் புகார் செய்துள்ளார். இதை தெரிந்துகொண்ட காரல்மார்க்ஸ் உள்ளிட்ட அவரது நன்பர்கள் பூமிநாதனுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அதையும் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் கூறியிருக்கிறார். அதை காவல்துறை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் போனதால், மாணிக்க நாச்சியார் கோவில் பகுதியில் தனது மகன்களுடன் இருந்த பூமிநாதனை காரல் மார்க்ஸ், நரேஷ், ராஜேஷ், சதீஷ் ஆகிய நான்கு பேரும் தகராறு செய்துள்ளனர்.

 

அப்போது உடனிருந்த பூமிநாதனின் மகன் அரவிந்தன் தட்டிக் கேட்டுள்ளார். ஆந்திரமடைந்த அந்த கும்பல் அரவிந்தனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க ஓடிய அவரது சகோதரர் அருண்குமாரையும் சரமாரியாக வெட்டினர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதனை தடுக்க ஓடிய அதே பகுதியை சேர்ந்த அரவிந்தனின் நண்பர்கள் சந்தோஷ், மோகன் என்பவர்களையும் அந்த கும்பல் வெட்டி வெறியை தீர்த்துக்கொண்டது.

 

பிறகு வழக்கம்போல் செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். அதோடு அச்சத்தோடு இருந்த அப்பகுதி மக்களுக்கு துனிச்சல் அடைய செய்யும் வகையில் ஐ.ஜி. ஜெயராமன் தலைமையில் போலீஸார் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

 

"கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. சாதாரண இருநூறு ரூபாய் பொருமானமுள்ள இரும்பு கேட்டுக்காக இந்த கொலை நடந்திருக்கிறது. ஏற்கனவே பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறை, அவர்களை கண்கானிக்காமல் விட்டுவிட்டது, அதோடு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தவறியதால் இந்த கொலை நடந்திருக்கிறது, இந்த கொலைக்கு முழு பொருப்பு காவல்துறைதான்.

 

இந்த சம்பவம் போலவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாச்சியார்கோயில் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரும், அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர், இரண்டு சம்பவமும் திருவிடைமருதூர் மாவட்ட காவல்துணை கண்கானிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலைய பகுதி.

 

திருவிடைமருதூர் டி.எஸ்.பி. சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்பட்டதே கிடையாது. அதே போல மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கொடுக்க வேண்டிய தனிப்பிரிவு போலீஸாரும் பணியில் அலட்சியமாக உள்ளனர். தகவல் கேட்கவேண்டி மாவட்ட எஸ்.பி.யும் அதை பற்றி கவலைகொள்வதில்லை, அதனால் இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடக்கிறது.

 

நாச்சியார்கோயில், திருப்பனந்தாள் காவல்நிலைய ஆய்வாளர்கள் கடமை தவறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உயர் அதிகாரிகள், அவர்களை முறையாக கண்கானிக்காமல் கடமை தவறிய திருவிடைமருதூர் டி,எஸ்,பி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை" என்கிறார் தகவல்களை நன்கு தெரிந்த கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த நேர்மையான காவலர் ஒருவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

Next Story

மனைவியை வெட்டிவிட்டு தப்பியவர் விபத்தில் பலி 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.