Skip to main content

தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும்! சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு!!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள நினைக்கிறது பாஜக; ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறது என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் பேசினார். 

 

 

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12, 2019) பரப்புரை செய்தார். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் சேலத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

 

 

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: 

 

 Tamils ​​need to rule Tamil Nadu Rahul Gandhi Speech at Salem

 

வரும் மக்களவை தேர்தல் இரண்டு சிந்தனைகளுக்கு இடையேயான போட்டியாகத்தான் இருக்கிறது. பாஜக, ஒற்றை நாடு, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம், ஒரே வரலாறு என்பதை நிறுவ முயன்று வருகிறது. ஒரே கருத்துதான் நாட்டை ஆள வேண்டும் என்று கருதுகிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்த நாட்டின் மீது பல்வேறு பார்வைகள் உள்ளன. இந்த நாட்டில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சிந்தனைகளை அனுசரித்துப் போகும் நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

 

 

அவர்களோ (பாஜக), நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறார்கள். பிரதமர் அலுவலகமும், அங்குள்ள அதிகாரிகளும்தான் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகள் என்கிறார்கள் பாஜகவினர். ஆனால், நாங்களோ (காங்கிரஸ்) தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று எண்ணுகிறோம். தமிழகத்தின் குரலை நாட்டின் வலிமை மிக்க குரலாக பார்க்கிறோம்.

 

 

தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவை பசுமையான இந்தியாரை உருவாக்க பக்கபலமாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நாங்கள் கூட்டணியாக இணைந்து பணியாற்றுகிறோம். காங்கிரஸ், எப்போதுமே அதிகாரப்பரவலை விரும்பும் கட்சியாக இருந்து வந்திருக்கிறது. 

 

congress

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை கலைஞர் இறந்தபோது, அவர் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டதாக இங்கே சொன்னார். தந்தையை இழந்த ஒரு மகனின் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் உங்கள் தந்தை, கட்சித் தலைவர் மட்டுமல்ல; அவர் தமிழர்களின் குரலை உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து  இருந்தார்.

 

 

திமுக, காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார். இந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் தயாரித்து இருக்கிறோம். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது, நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதா என்ற திறமையான மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அதையும் கவனத்தில் கொண்டுதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு  உள்ளது. 

 

 

நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்து இருக்கிறோம். இனியும் ஒரு அனிதா சாவதை நான் விரும்பவில்லை. நாம் கருத்து உரிமையை விரும்புகிறோம். மக்களின் குரலைக் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம். 

 

 

ஒரு நாள் இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து விட்டார். அதனால் திருப்பூரில் ஏற்றுமதி  நிறுவனங்கள் அழிந்துவிட்டன. தமி-ழ்நாட்டில் ஏராளமான உற்பத்திக்கூடங்கள் முடங்கின. சிறுதொழில்கள் முடங்கின. பணமதிப்பிழப்பு செய்வது குறித்து அவர் யாரையாவது அழைத்துக் கேட்டாரா? எந்த ஒரு சிறுதொழில் முனைவோரையாவது அழைத்து கருத்து கேட்டாரா? ஒரு 12 வயது குழந்தையை அழைத்துக் கேட்டிருந்தால்கூட 500, 1000 ரூபாய் நோட்டை மதிப்பிழக்கம் செய்வது தேவையற்றது என்று பதில் சொல்லியிருக்கும்.

 

 

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அம்பானிக்கும், அதானிக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மோடி. நாட்டில் 15 பெரிய பணக்காரர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். ஜந்தர் மந்தரில் கோவணத்துடன் போராடிய விவசாயிகளை அழைத்துப் பேச மறுத்தவர்தான் நரேந்திர மோடி. அவர்களை அ-ழைத்துப்பேச வேண்டும் என்ற நாகரிகம்கூட தெரியாதவர்தான் மோடி.

 

 

விவசாயிகளை பார்க்க மறுத்த மோடி, அனில் அம்பானியையும், நீரவ் மோடியையும், விஜய் மல்லையாக்களையும் கட்டித்தழுவுகிறார். ஜிஎஸ்டி என்ற பெயரில் ஐந்து விதமான வரிவிதிப்பை பாஜக கொண்டு வந்திருக்கிறது. 28 சதவீத வரியால் நெசவாளர்கள் நூல் வாங்கக்கூட முடியாமல் திணறுகின்றனர். நெசவு கருவிகள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்

 

 

அதனால்தான் நாம் ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரியை கொண்டு வருவோம் என உறுதி அளித்திருக்கிறோம். இதுமட்டுமின்றி நாட்டின் வறுமை ஒழிப்பில் புரட்சிகரமான திட்டத்தையும் வகுத்து இருக்கிறோம். வறுமை மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் என்றும் சொல்லலாம். இதற்காக 'நியாய்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நியாய் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு மாதம் 6000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் 3.60 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கும். ஆண்கள் விரும்பாத பட்சத்தில் அவர்கள் வீட்டுப் பெண்களின் வங்கிக்கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.

 

 

உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற புரட்சிகரமான திட்டம் இல்லை. அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். மத்திய அரசுப்பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். 

 

 

எதற்கெடுத்தாலும் மேக் இன் இந்தியா என்கிறார் மோடி. ஆனால் மொபைல் போன், காலணிகள், சட்டை என எல்லாவற்றிலும் மேட் இன் சைனா என்றே இருக்கிறது. தொழில் தொடங்க வேண்டும் என்றால் எல்லா துறைகளிலும் அனுமதி பெற லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய  தொழில் கொள்கை வகுக்கப்படும். அதன்படி, தொழில்முனைவோர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்த துறையிலும் அனுமதி கேட்டு காத்திருக்கத் தேவையில்லை. அதன்பிறகு அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் போதுமானது. அப்போது உதவிகள் கேட்டாலும் வழங்கப்படும். 

 

 

நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அந்த பணியிடங்களை நிரப்ப மோடி ஆட்சி தவறி விட்டது. இவை தவிர மேலும் பத்து லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். ஒத்த கருத்துள்ள ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமைய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.