Skip to main content

தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய பெண்கள்!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

perambalur

 

பெரம்பலூர் மாவட்டத்தில் கொட்டரை நீர்த்தேக்கம் உள்ளது. கடந்த 6- ஆம் தேதி சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 12 இளைஞர்கள் இந்த நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். நீர்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்லும் பகுதியில் சுமார் 10 அடி ஆழம் அளவிற்கு தேங்கியிருந்த தண்ணீரில் மேற்படி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பவன்குமார், கார்த்திக், ரஞ்சித், பவித்ரன் ஆகிய 4 இளைஞர்களும் குளிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அங்கிருந்து நீந்தி கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள் தங்களின் நண்பர்கள் நால்வரும் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்து பதறிப்போய் கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஆதனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி, சுந்தரபாலன் என்பவரின் மனைவி முத்தம்மாள், அண்ணாமலை என்பவரின் மனைவி ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்களும் இளைஞர்கள் போட்ட சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தனர். 

 

தண்ணீரில் நீச்சல் தெரியாமல் நான்கு இளைஞர்கள் தத்தளிப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் மூன்று பெண்களும் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று தங்கள் அணிந்திருந்த சேலையை பயன்படுத்தி அதைஒன்றாக சேர்த்துக் கட்டி நீரில் தத்தளித்த இளைஞர்கள் நோக்கி வீசினார்கள். அந்த சேலையை பிடித்து கொண்ட பவன்குமார், கார்த்திக் ஆகிய இருவரும் கரைக்கு திரும்பினர். பின்னர் அந்த மூன்று பெண்களும் மீண்டும் தண்ணீரில் நீந்திச் சென்று தண்ணீரில் தத்தளித்த  மேலும் இருவரை தேடி பார்த்தனர். அதற்குள் அந்த இரு இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் நீர்தேக்கத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக நீர்த்தேக்கத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவரது சடலத்தையும் மீட்டனர். தங்கள் உயிரை பெரிதாக கருதாமல் தண்ணீரில் தத்தளித்த இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்ட மூன்று பெண்களின் துணிச்சலையும், மனிதாபிமானத்தையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூகவலைதளங்களில் பெண்களின் வீரதீர செயல் குறித்து பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வீரதீர செயல் புரிந்ததற்காக மூன்று பெண்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பெரம்பலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளைஞர்களைக் காப்பாற்றிய பெண்கள் கூறும்போது, "நீர்த்தேக்கத்தில் இறங்கி குளிப்பதற்கு வந்த இளைஞர்களிடம் நாங்கள் மூவரும் இப்பகுதியில் தண்ணீர் ஆழம் அதிகம் இருக்கும். அதனால் படிக்கட்டிலிருந்து குளிக்க வேண்டும். தண்ணீருக்குள் கீழே  இறங்க வேண்டாம் என நாங்கள் முன்னெச்சரிக்கையாக அவர்களிடம் தெரிவித்தோம். அதன்பின் நாங்கள் துணி  துவைத்துக் கொண்டிருந்தோம். அப்போது மற்ற இளைஞர்கள் கத்தி சத்தம் போட்டனர்.

 

அதை கேட்டு நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது 4 இளைஞர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீரில் குதித்து நாங்கள் அணிந்திருந்த சேலையை பயன்படுத்தி இரண்டு பேரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மீண்டும் தண்ணீரில் நீந்திச் சென்று மற்ற இருவரையும் காப்பாற்றுவதற்க்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டதால் அவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அது எங்களுக்கு வருத்தமாக உள்ளது."  இவ்வாறு அந்த மூன்று பெண்களும் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.