Skip to main content

ஈரோட்டில் திருமா வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய பா.ஜ.கவினர்... போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வெளிப்படையாக தாக்குதல் நடத்தி வன்முறையை ஏற்படுத்திய சம்பவம் 26 ந் தேதி காலை ஈரோட்டில் நடந்துள்ளது. சமீபத்தில் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்மம் பற்றியும் அதில் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். இந்த பேச்சு பெண்களை  இழிவுபடுத்துவதாக சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு சென்ற  நடிகை குஷ்புவும் பா.ஜ.க.நிர்வாகிகளும் திருமாவளவனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு எதிர்ப்பு கருத்துக்களை கொளுத்தி போட்டனர். 

திருமாவளவனை கைது செய்யக் கோரி பல ஊர்களில் காவல்நிலையத்தில்  பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பாரதிய ஜனதா மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ் பேட்டை என்ற இடத்தில் அவரது நண்பரான டாக்டர் நவீன் பாலாஜி என்பவரது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் இன்று வந்தார்.

இந்த தகவல் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிய வர  அந்தப் பகுதியில் ஏராளமான இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டிருந்தனர். போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் கார் அந்த இடத்திற்கு வந்தது. உடனே பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திருமாவளவன் கார் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டது. பின்னர் பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பியபடியே இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் கோஷம் போட்டனர்.

பிறகு இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவர நிலை உருவானது. அடுத்தடுத்து  கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தது.  இதில் போலீஸ் வாகனம் மீது கல் விழுந்து சேதமடைந்தது மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தது இதனால் அந்தப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.  தொடர்ந்து பாரதிய ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தனித்தனியாக தங்க வைத்தனர். திருமண நிகழ்வை முடித்து திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டார்

ஒரு கட்சியின் தலைவர் கட்சி நிகழ்ச்சி அல்லது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு வரும் போது அவரை தாக்கும் திட்டத்துடன் ஒன்று கூடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் வந்ததும் அவர்களை உடனே அப்புறப்படுத்தி கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்த்ததும் வியப்பாக உள்ளது. வெளிப்படையான வன்முறையில் இறங்கும் நிகழ்வு ஜனநாயத்திற்கு ஆபத்தானது என்றும் வன்முறையின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் செயலாகத் தான் இதை பார்க்க முடியும் என்று அரசியல் வட்டாரம் இச்செயலை கண்டித்து அறிக்கைகள் விட்டுள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.