Skip to main content

நகர்ப்புறத் தேர்தல்: பரபரப்புகளும், குளறுபடிகளும்!  

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

Tamilnadu Urban Election Tenkasi and Tuticorin

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுகள் காலையிலிருந்தே பரபரப்புகள். அதே சமயம் குளறுபடி மோதலுக்கும் குறைவில்லை.

 

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் நகராட்சியின் 17வது வார்டில் அரசியல் கட்சிகளிடையே சகிலா பானு என்கிற பெண் சுயேட்சை வேட்பாளரும் போட்டியிலிருப்பவர். வாக்குப் பதிவு அன்று வாக்கு இயந்திரத்திலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசு பட்டியல் விளம்பரத்திலும் சகிலாபானு என்பதற்குப் பதிலாக சசிகலா பானு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்திருக்கிறார் சகிலாபானு. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் பெயர் குழப்பத்தால் வாக்காளர்கள் யோசிக்க சகிலாபானுவின் கணவர் சுலைமான், வேட்பாளர் பெயர் மாறுதலைச் சுட்டிக்காட்டி வாக்குப்பதிவை நிறுத்திவைக்கும்படி பூத் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய, விவகாரம் பரபரப்பாகியிருக்கிறது. இந்த வார்டில் சசிகலா எனும் இன்னொரு வேட்பாளரும் இருந்ததால் இந்தத் தவறு ஏற்பட்டிருக்கிறது. 

 

Tamilnadu Urban Election Tenkasi and Tuticorin

 

இதனால் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட, தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த தேர்தல் அதிகாரியும், கடையநல்லூர் நகராட்சியின் ஆணையருமான ரவிச்சந்திரன் சசிகலா பானு என்ற பெயரை நீக்கிவிட்டு சகிலாபானு என்று மாற்றிய பிறகே, நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு தொடர்ந்திருக்கிறது.

 

அதே மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சியின் 5வது வார்டு 8 தெருக்களை உள்ளடக்கிய பெரிய வார்டு. தேர்தல் தோறும் வழக்கம் போல் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் தனித்தனி வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை வழக்கப்படி தனித் தனி பூத் வைக்கப்படாமல் ஆண்களும் பெண்களும் ஒரே பூத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் கூட்டம் காரணமாக வாக்குப்பதிவு செய்வதற்கு நேரம் பிடித்திருக்கிறது. இதனால் அந்த பூத்தில் வாக்குப்பதிவின் சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதே போன்ற சூழல்கள் தான் ஒரு சில வார்டுகளில்.

 

Tamilnadu Urban Election Tenkasi and Tuticorin
ஆண்களுக்கு தனி பூத்

 

அதே சமயம் நான்கே தெருக்களை உள்ளடக்கிய 13 மற்றும் 16வது பூத்களில் முறைப்படி ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனி பூத் வைக்கப்பட்டிருப்பதையும் நாம் சுட்டிக்காட்டி வாக்குப்பதிவில் தாமதமேற்படுவது தொடர்பாக தென்காசி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அவரது தொடர்பு நம்பரைக் கேட்பதற்காக அவரது அலுவலக, பத்திரிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வைத்திருக்கிற மக்கள் தொடர்புத் துறை அலுவலகமான பி.ஆர்.ஓ. அலுவலகத்தின் ஏ.பி.ஆர்.ஓ.வான ராம சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்ட போது, அவரோ கலெக்டர் மொபைல் நம்பர் எனக்குத் தெரியாதே என்று சொல்லிவிட்டார். விடாமல் தொடர்ந்து, முயற்சிகளை மேற்கொண்ட நாம், சங்கரன்கோவில் நகராட்சியின் ஆணையரும் நகர தேர்தல் பொறுப்பாளருமான சாந்தியிடம் தெரிவித்தபோது, அவர் தாமதமில்லாமல் உரிய பணியாளர்களை அனுப்பி, குறைகளை நிவர்த்தி செய்தார்.

 

Tamilnadu Urban Election Tenkasi and Tuticorin
பெண்களுக்கு தனி பூத் 

 

தூத்துக்குடியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட மிகப் பெரிய 13வது வார்டில் அ.தி.மு.க.வில் அன்னபாக்கியமும், தி.மு.க. தரப்பில் ஜாக்குலின் ஜெயாவும் போட்டியிலிருக்கின்றனர். இவர்களிருவருமே அந்த வார்டிலிருக்கும் ரத்த உறவுகளைக் கொண்ட பெரியகுடும்பம். இந்தத் தேர்தலில் அதே வார்டில் நேருக்கு நேர் மோதினர்.

 

வாக்குப்பதிவின் முடிவு நேரத்தின் போது இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ராஜா இருவரும் போதையில் வாக்குப்பதிவுப் பகுதியில் ஒரு சிலரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் விவகாரம் கிளம்பியபோது அதனை மூர்த்தி என்பவர் தட்டிக் கேட்டதில் இவர்களுக்குள் கைகலப்பாகி அடிதடியாகியிருக்கிறது. காயமடைந்த ஸ்ரீதர், ராஜா இருவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆனதில், சிகிச்சையை அடுத்து ராஜா வீடு திரும்ப ஸ்ரீதரோ ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டுள்ளாராம். அடித்தவரும் அடிபட்டவர்களும் ஒரே ரத்த பந்தம் என்பதால், இந்த மோதல் சம்பவத்தைப் பெரிது படுத்தாமல் கமுக்கமாக வைத்துக் கொண்டார்களாம்.

 

தவிர தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் ஒரே தரப்பின் வைட்டமின் பாய்ச்சல் வீரியம் காண, எதிர் சைடில் வைட்டமின் சத்துக் குறைந்ததால் உச்சம் போக வேண்டிய வாக்குப்பதிவு 64 சதவிகிதத்தோடு நின்றுவிட்டது என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.