tamilnadu theatres are opening on nov 10th government released coronavirus prevention

Advertisment

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 'திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். முகக் கவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது. திரையரங்குகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திரையரங்கின் நுழைவுவாயிலில் பொதுமக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.

பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும். திரைப்படத்தின் இடைவேளையின் போது, மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும். மக்கள் வெளியே சென்றுவரும் வகையில் இடைவேளைக்கான கால அளவை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகளில் டிக்கெட் வாங்குபவரின் தொலைபேசி எண்ணை நிர்வாகம் பெற வேண்டும். ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும். தியேட்டரில், எஸ்கலேட்டர், லிஃப்ட் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்'. இவ்வாறு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

நவம்பர் 10- ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.