tamilnadu rains regional meteorological centre in chennai

Advertisment

“வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூர் (கடலூர்)- 13 செ.மீ., ஒகேனக்கல், மதுரையில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. சூறாவளி காற்று வீசும் என்பதால் அக்டோபர் 14- ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்”இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.