
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, கோவை, திருவள்ளூர், வேலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் வரும் அக்டோபர் 12- ஆம் தேதி வரை அந்தமான் கடற்பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதி, ஆந்திர கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும் குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியிலும் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்ப்பிடிக்க செல்ல வேண்டாம். சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.