Skip to main content

தமிழக சிறைகளில் கரோனா தனிமை வார்டுகள் அமைப்பு! கைதிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாகிறது!!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

தமிழக சிறைகளுக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை கட்டாயமாகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறைகளில் கரோனா சிகிச்சைக்கென தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி தொலைவில் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சமூக விலகல் அவசியம் என்கிறது சுகாதாரத்துறை. 

நோய்த்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக சிறைச்சாலைகளில் கைதிகளிடையே நெருக்கத்தைக் குறைக்கும் நோக்கில், முதல்கட்டமாக 2400 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நன்னடத்தை விதிகளின் கீழ் பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

tamilnadu prison corona ward arranged dig police order

புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு சிறையிலும் புதிய கைதிகளுக்காக தனிமை வார்டுகள் தொடங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு சிறை வீதம் 37 சிறைகளில் கரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகள் அமைக்க சிறைத்துறை டிஐஜி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தனிமை வார்டுகள் அமைக்கப்பட உள்ள சிறைகளில் ஏற்கனவே உள்ள கைதிகளை, அருகில் உள்ள மற்ற சிறைகளுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்த கைதிகள் 20 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி சிறையில் இருந்த 7 பெண் கைதிகள் சேலம் பெண்கள் சிறைக்கும், நாமக்கல் சிறையில் இருந்த 3 கைதிகள் ராசிபுரத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். 

''புதிதாக வரும் கைதிகள் மற்றும் ஏற்கனவே பரோலில் சென்று விட்டு மீண்டும் சிறைக்கு திரும்பும் கைதிகளை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் சிறைச்சாலைகளில் கரோனா தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன,'' என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.