Skip to main content

“ஏழைகளுக்கு உதவுங்கள்.. இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்!”- கே.டி.ராஜேந்திரபாலாஜி சென்டிமெண்ட்! 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட அதிமுக சார்பாக 15 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு 10 கிலோ அரிசி பைகள் வழங்கப்படுகிறது. அந்தப் பணிகளை நான் நேற்று (26/04/2020) தொடக்கி வைத்துள்ளேன். அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் ஏழை, எளிய மக்கள் கணக்கெடுக்கப்பட்டு 15 ஆயிரம் நபர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கி வருகிறோம். ஏழை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று 10 கிலோ நயம் பொன்னி அரிசியை கொடுக்கிறோம். திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் இருந்து இந்த பொன்னி அரிசியை வாங்கி நாங்கள் விநியோகித்து வருகிறோம். விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக வழங்கப்படும் நிவாரண பொருட்கள் கட்சி,ஜாதி, மத பேதமின்றி, ஏழைகளை மட்டுமே கணக்கிலெடுத்து வழங்கி வருகிறோம்.
 

tamilnadu minister rajendra balaji specch


ஏற்கனவே, விருதுநகர் மாவட்டத்தில் 8 அம்மா உணவகங்கள் மூலம் அதிமுக சார்பாக மூன்று வேளையும்  இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். இதற்காக ரூபாய் 8 லட்சத்து 58 ஆயிரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம். உணவு வழங்குவதில் கூடுதல் செலவு ஏற்பட்டால் அதையும் நாங்கள் தருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். முதலமைச்சர் எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க வேலையில்லாமல் இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்கின்ற பணியை விருதுநகர் மாவட்ட அதிமுக சிறப்பாக செய்து வருகிறது. தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1000- ஐ நிவாரணத் தொகையாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக  வேண்டுகோளை ஏற்று விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, பட்டாசு தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள் இருந்தாலும்கூட பட்டாசு தொழிலுக்கும் தீப்பெட்டி தொழிலுக்கும் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தியுள்ளார். 
 

tamilnadu minister rajendra balaji specch


ஏற்கனவே, ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 1000 மற்றும் உணவுப் பொருட்கள் இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் ஆவின் பால் தங்குதடையின்றி கிடைத்து வருகிறது. சென்னை போன்ற பகுதிகளில் ஆவின் பால் வீட்டிற்கே நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது. தன்னார்வ அமைப்புகள் நிவாரண பொருட்களை தரமானதாக கொடுக்கவேண்டும். அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஏழைகளுக்கு உதவுங்கள் என்றுதான் எல்லாம் மதமும் சொல்கின்றது. அதிமுக அரசு அதைச் செய்து கொண்டிருக்கிறது. புயல் என்று வந்துவிட்டால் செடிகள், கொடிகள் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படத்தான் செய்கிறது. அதுபோல், தற்போதுள்ள சூழ்நிலையில் பாதிப்புகளை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது. 
 

ந



தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு தனி கவனம் எடுத்து போராடிக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 800 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொஞ்ச நாள் பொறுத்து இருந்தால் இந்த நோயிலிருந்து நாம் விடுபடலாம். மக்களின் நன்மைக்காகவே மதுரை, கோவை, சென்னை உட்பட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, சமூக பரவல் மூலமாகவே வைரஸ் தாக்கி விடக்கூடாது என்பதற்காக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஒரு சில அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடியார் கருத்துகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மே 3- க்கு பிறகு ஊரடங்கு தொடர்வதா என்பதை பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் தான் முடிவு செய்வார்கள்.” என்றார். 

 

சார்ந்த செய்திகள்