Skip to main content

"உங்கள் சட்டமன்ற உரையை படித்துப் பாருங்கள்"- ஓ.பி.எஸ் -க்கு அமைச்சர் பதிலடி!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

tamilnadu minister periyasamy statement

 

தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி இன்று (17/02/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எங்கள் கழகத் தலைவரும்,முதலமைச்சருமான தளபதியைப் பார்த்து கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது.

 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர். அதுவும் அ.தி.மு.க. ஆட்சி முடிவு எடுப்பதற்கு முன்பே களத்திற்கு வந்தவர் எங்கள் தலைவர். மெரினா போராட்டமாக இருந்தாலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றாலும், அன்று போராடிய இளைஞர்களோடு தோளோடு தோள் நின்றவர்.

 

அ.தி.மு.க. அரசு, ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள், அதுவும் அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதும் உண்மை; போலீஸ் தடியடி நடத்தியதும் உண்மை. மீனவர்களின் கடைகளை சென்னை நடுக்குப்பத்தில் அடித்து உடைத்ததும் உண்மை. ஏன் போலீசாரை விட்டு டயர்களை கொளுத்தி விட்டு- ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் மீது பழி போட முயற்சி செய்ததும் உண்மை. இதில் எது பொய் என ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

 

அதன்பிறகு போராட்டத்திற்குப் பணிந்து, ஒன்றிய பா.ஜ.க. அரசும், ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. அரசும், இளைஞர்களின் உணர்வுகளை இனியும் எதிர்க்க முடியாது என்ற தெரிந்த பிறகுதான் ஜல்லிக்கட்டுக்குச் சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டது. ஆனால் துவக்கம் முதலே போராடிய இளைஞர்கள் பக்கம் நின்று, சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதாவை ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்தவர்தான் எங்கள் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட்டுப் பேசுகிறார்.

 

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அ.தி.மு.க. அரசின் அராஜகத்தைக் கண்டித்து, எங்கள் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றியதற்கு 27/01/2017 அன்று பதிலுரை அளித்தவர்  ஓ.பன்னீர்செல்வம் தான். அந்த பதிலுரையில், “சென்னை மெரினா கடற்கரையில் மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களால் அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது” “குடியரசு நாள் விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது” “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டுமென கோரி வந்தவர்கள். தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்" என்றும் “ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தார்கள்” என்றும், “இந்திய குடியரசுத் தினத்தை நிராகரிக்கிறோம் என்ற பதாகைகள் வைத்திருந்தார்கள்” என்றெல்லாம் சட்டமன்றத்தில் உரையாற்றியது யார்? சாட்சாத் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

“காவல்துறையினர் தகுந்த எச்சரிக்கைக்குப் பிறகு குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை உபயோகித்தும் அவர்களை கலைந்து போகச் செய்தனர்” “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசவிரோத, சமூக விரோத, தீவிரவாத சக்திகள் ஊடுருவி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராகவும் செயல்பட்டவர்களை குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தார்கள்” “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட தீய சக்திகளை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டமன்றத்தில் உரையாற்றி, அதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜசேகரன் அவர்கள் தலைமையில் அமைத்தது இதே ஓ.பன்னீர்செல்வம்தான். சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மீது எவ்வளவு அவதூறுகளை வீச முடியுமோ, எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியுமோ, அத்தனையையும் செய்து விட்டு இன்று ஒன்றும் தெரியாதது போல் அறிக்கை விடுவதும், உண்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கண்டனம் செய்வதுதான் அரசியல் நாகரிகமா?

 

எங்கள் தலைவர் மிகத் தெளிவாக, அடுத்த முறை சட்டமன்றத்திற்கு வரும் போது, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்திப் பேசியதை படித்துப் பாருங்கள் என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு சொல்லியிருந்தார். அதைக் கூட புரிந்து கொள்ளாமல் மதுரையில் தன் வேடத்தைக் கலைத்து விட்டாரே, இளைஞர்களின் சாதனையை தன் சாதனை போல் இத்தனை காலமும் பேசி வந்ததை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபத்தில், எரிச்சலில் எங்களின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது பாய்ந்து கண்டன அறிக்கை வெளியிடுவதில் அர்த்தமில்லை.

 

ஆகவே, ஓ.பன்னீர்செல்வம் அன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து, அவர்கள் சொன்னதைக் கேட்டு ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள்; களங்கப்படுத்தினீர்கள் என்பதை தி.மு.க. தலைவர் சொன்னதுபோல் ஆற அமர்ந்து ஒருமுறை உங்களது சட்டமன்ற பதிலுரையை படித்துப் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.