அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு, இந்தியா முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் ஊரடங்கை 30.06.2020 வரை அமல்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காலத்தில், மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 1,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன்"என குறிப்பிடப்பட்டுள்ளது.