சேலத்தில், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் 4 கிலோ போலி தங்க நகைகளை அடமானம் வைத்து, 94 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் உள்பட 25 பேரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் 4 சாலை காமராஜர் காலனியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இவ்வங்கியின் கிளை மேலாளர் தெய்வமணி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ''எங்கள் வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பு பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை சில வாடிக்கையாளர்கள் போலி நகைகளை அடகு வைத்து, பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இதற்கு நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் என்பவர் உடந்தையாக இருந்து மோசடி செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கலைவாணி தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் 24 வாடிக்கையாளர்கள் 4 ஆயிரம் கிராம் (4 கிலோ) வரை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து 94 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. நகை மதிப்பீட்டாளர் சக்திவேல், தங்க நகைகளின் தரத்தை பரிசோதிக்காமலேயே, போலி நகைகளை அசல் நகைகள் என சான்றளித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் மற்றும் சக்திவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் மேற்படி கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.