Skip to main content

"கரோனா பரவல் வேகம் சற்று குறைந்திருக்கிறது" - தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

tamilnadu health secretary pressmeet at chennai

 

சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் அதிகரித்து வந்த கரோனாவின் பாதிப்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் அதன் வேகம் சற்று குறைந்திருக்கிறது. அடுத்த சில நாட்கள் மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக்கொண்டால் கரோனா முழுமையாகக் குறையும். முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால், முகக்கவசம் அணிய வேண்டும்.

 

மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கரோனா குறைவாக இருப்பதாக நினைத்து மக்கள் வெளியே வரக்கூடாது. தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை நான்காயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வீணாவதை 5% ஆக குறைத்துள்ளோம். தமிழகத்தில் கரோனா பரிசோதனையை அரசு குறைக்கவில்லை. முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களின் வருகை குறைந்ததால் சோதனை குறைந்தது. தமிழகத்தில் ஒரு லட்சம் அளவிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கான சிறப்பு மையம் விரிவுபடுத்தப்படும். ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்கள் கரோனா பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

What are the symptoms of dengue fever?

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம்பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவியதற்கான அறிகுறிகளை எளிய முறையில் கண்டறிந்து அதை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அதன் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தீவிர அறிகுறிகள்.

 

இதில் டெங்கு நோய்த் தொற்றின் முதன்மை அறிகுறிகளில் காய்ச்சல் ஒன்றாகும். இது பொதுவாகத் திடீரென்று தோன்றும் மற்றும் பல நாள்களுக்கு நீடிக்கலாம். இதில் ஆரம்ப அறிகுறியானது, உடல் சோர்வு அதிகமாகக் காணப்படும். மேலும், படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் வலி இருக்கும். தலைவலி கூடுதலாக இருக்கும். கண்களில் அதிக வலி இருக்கும். அத்துடன் கால்கள் மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும். இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகளாகும். 

 

அதே தீவிர அறிகுறி என்றால், பல் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக அளவுக்கு உடல் அசதி மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் உதிரப்போக்கு அதிகரிக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  இந்த காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கக் கூடிய நிலவேம்பு கசாயத்தை அருந்தலாம். 

 

மேலும், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களைத் தடுப்பதற்கு நமது வீட்டில் உள்ள தேவையற்ற நீர் தேங்கும் தொட்டி அல்லது பாத்திரங்களை அகற்றிவிட வேண்டும். ஏனென்றால், நீர் தேங்கும் இடத்தில் கொசு தனது இனப்பெருக்கத்தை அதிகரித்து டெங்கு காய்ச்சலை உண்டாக்கும். மேலும், வீட்டில் உள்ள தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களைக் கொசு அண்டாத அளவுக்கு மூடி வைக்க வேண்டும். ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அடிக்கடி வெளியேற்ற வேண்டும். இது மாதிரி ஆரம்பக் கட்டத்திலேயே கொசுக்கள் பரவாமல் பல வழிமுறைகளைச் செய்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். 

 

 

Next Story

டெங்கு காய்ச்சலை தடுக்க வழிமுறைகள் என்ன?

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

What are the measures to prevent dengue fever?

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம் பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. அதை செய்தால், நாம் இது போன்ற கொடிய காய்ச்சலில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும்.

 

இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாள்கள் பிடிக்கும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, வயிற்றுப்போக்குடன் அறிகுறிகள் தொடங்கும். பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய் தாக்கம் அதிபயங்கர தாக்குதலுக்கு உண்டாக்கும்.

 

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவான ஏ.டி.எஸ் வகை கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த சில வழிமுறைகள் செய்ய வேண்டும். அதில், வீட்டில் உள்ள பழைய டயர், தூக்கி வீசி எறியப்பட்ட பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது.

 

மேலும், உபயோகப்படுத்தாத கழிவறைகளில், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு உண்டு. அதனால், அது போன்ற கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வீட்டில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும், தண்ணீர் பாத்திரங்களை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும், நீர்த்தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது நீக்கி விடவேண்டும். ஏனென்றால், இது போன்ற தண்ணீர் தேங்கும் தொட்டிகளில் இந்த வகையான கொசு தனது இனப்பெருக்கத்தை செய்து பரவும் அபாயம் உள்ளது.

 

கொசு கடிக்காமல் இருக்க கை கால்களை மறைக்கும் உடைகளை அணியவேண்டும்.  வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து பார்த்து கொள்ள வேண்டும். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப்படுத்தலாம். இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம். குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும். அதனால், அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது, கொசுவை ஒழிக்க ஏதுவாக இருக்கும்.

 

மேலும், நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வாவை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம் கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம். கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலமுமே டெங்கு காய்ச்சலை தடுக்க, ஒழிக்க முடியும்.