Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையுடன் ’சிக்ரெட் டீலிங்’ வைத்துள்ளது தமிழக அரசு - வைகோ பகீர் குற்றச்சாட்டு!

Published on 12/06/2018 | Edited on 12/06/2018


ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளருடன் ‘சீக்ரெட் டீலிங்’ வைத்து இருக்கிறது தமிழக அரசு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெரியார்-அண்ணா பிறந்தநாள் விழா - ம.தி.மு.க. வெள்ளிவிழா - வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்களை செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் முப்பெரும்விழா மாநில மாநாடாக சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முப்பெரும் விழா மாநில மாநாட்டில் என்னுடைய பொதுவாழ்வு பொன்விழாவையும் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். நான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் உயர்மட்டக்குழுவினரின் வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டேன்.

 

 

மாநில மாநாட்டில் பங்கேற்க மன்மோகன்சிங், பரூக் அப்துல்லா, சரத்பவார், யஷ்வந்த் சின்கா, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்து இருக்கிறோம். இந்த மாநாடு இயக்கத்தின் வரலாற்றில், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழக அரசின் போக்கு கவலை அளிக்கிறது. காவல்துறையை ஏவி, நடவடிக்கை எடுக்கும் அடக்குமுறை அரசாக இருக்கிறது. ஊடகங்கள், பத்திரிகைகளை மிரட்டுகிற வேலைகளை பெரிய சர்வாதிகாரிகள் செய்து தூள் தூளாகி போய்விட்டார்கள். இந்த வேலை அரசுக்கு எதற்கு? எத்தனை காலம் அதிகாரம் செலுத்த முடியும்? எவ்வளவு நாள் ஆட்சியில் இருக்கப்போகிறீர்கள்?

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளருடன் ‘சீக்ரெட் டீலிங்’ வைத்து இருக்கிறது இந்த அரசு. அவர்களுக்கு சாதகமாக இருக்க தான் பார்க்கிறார்கள். அனில் அகர்வாலுக்கு கூலிப்படையாக அரசு இருக்கிறது. கோர்ட்டில் உத்தரவு பெற்று வந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவந்தாலும் திறக்கவிடமாட்டோம். மக்கள் நலனை காக்க மக்களை திரட்டுவோம்.

இப்படிப்பட்ட நாசக்கார மத்திய அரசை பார்த்தது இல்லை. வருகிற மே மாதம் வரை பல கேடுகளை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு கேடு செய்யும் மத்திய அரசுக்கு, அ.தி.மு.க. அரசு துணைபோகிறது. இந்த 2 அரசுகளும் மக்கள் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்