Skip to main content

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குப் பாடநூல் வழங்க உத்தரவு!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

tamilnadu govt announce

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல்  தமிழக அரசு அறிவித்திருந்த பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நேற்று மத்திய அரசு வெளியிட்ட மூன்றாம் கட்ட தளர்வுகளில் கூட பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையவழி வகுப்புகளுக்கான கால நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பற்றி விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பாடநூல் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை, வழிமுறைகளைப் பின்பற்றி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2, 3, 4, 5, 7 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் எனக் கால அட்டவணையில் பாடநூல், புத்தகப்பை வழங்க வேண்டும். மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளியில் இரண்டு அல்லது மூன்று கவுண்டர்களில் பாடநூல்கள், புத்தகப் பைகளை வழங்க வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி மாணவர்களுக்குப் பாட நூல்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.