tamilnadu government municipality chennai high court

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் புகழேந்தி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அசாதாரண சலுகையாக அவரது நியமனம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை மாநகராட்சியின், முதன்மை தலைமைப் பொறியாளராக இருந்தவர் புகழேந்தி. இவரது பணிக்காலம் முடிந்த நிலையில், இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக, புகழேந்தி நியமிக்கப்பட்டார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த நடராசன், சென்னை மாநகராட்சி முதன்மை தலைமைப் பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கில், ‘நகராட்சி விதிகளுக்கு எதிராக புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பணி நீடிப்பு வழங்கப்பட, அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவரது பணி நியமனத்தை ரத்து செய்து, மீண்டும் தன்னை அந்த பதவியில் நியமிக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் அளித்த தீர்ப்பில், ‘நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் புகழேந்தியின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சட்டவிரோத பணி நீடிப்பு வழங்க முடியாது. அவருக்கு, அதற்கான தகுதி கிடையாது. அவரிடம் வேறு சிறப்பு தகுதியையும், நீதிமன்றத்தால் பார்க்க முடியவில்லை. முக்கிய தலைமைப் பதவியில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும்போது, தகுதியானவர்கள் இல்லாதபோது நியமிக்கலாம். புகழேந்தி நியமனம் அவ்வாறு இல்லை. அசாதாரண சலுகையாக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் நடராசனுக்கு, மீண்டும் நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் பணியை வழங்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.