tamilnadu government chennai high court

Advertisment

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனராகப் பதவி வகித்த சாருமதி, கடந்த 2019 மே 31- ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதன்பின் காலியான பதவிக்கு பூர்ணசந்திரனை நியமித்து, கடந்த ஆகஸ்ட் 14- ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி, திருவாரூர் திரு.வி.கஅரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கல்லூரிக் கல்வி இயக்குனராக உள்ளவர், பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், அப்பதவிக்கான தகுதியானவர்கள் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். ஆனால், பூர்ணசந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக, காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்ணசந்திரனை விட சீனியரான தன்னை, கல்லூரிக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். அவரை நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், பணி மூப்பில் உள்ள கீதாவை விடுத்து, பூர்ணசந்திரனை கல்லூரிக் கல்வி இயக்குனராக நியமித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பளித்த நீதிபதி பார்த்திபன், கல்லூரிக் கல்வி இயக்குனராக பூர்ணசந்திரனை நியமித்ததில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி, அவரது நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், கல்லூரிக் கல்வி இயக்குனரைத் தேர்வு செய்வதற்கு விதிகளைப் பின்பற்றி, மீண்டும் நடைமுறைகளை மேற்கொண்டு, மூன்று மாதங்களில் முடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.