Skip to main content

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33 சதவீதமும், கருணைத் தொகையை 11.37 சதவீதமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 
 

அதில் லாபம் ஈட்டிய பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% போனஸ் தரப்படும் என்றும், நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. போனஸ் வழங்குவதன் மூலம் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சுமார் 3,48,503 பேர் பயன் பெறுவார்கள். நிரந்தர ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 8,400, அதிகபட்சம் ரூபாய் 16,800 தீபாவளி போனஸை தமிழக அரசு வழங்கவுள்ளது. 
 

அதை தொடர்ந்து தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், மற்ற அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 20% போனஸ், பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என கூறியுள்ளது. 
 

TAMILNADU GOVERNMENT ANNOUNCED DIWALI BONUS GOVT EMPLOYEES


 

மின்வாரியம்,  போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸும், அதேபோல் வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.  சி மற்றும் டி பணியாளர்களுக்கு கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மேலும் நுகர்பொருள் வாணிபக்கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.