Tamilnadu government announced 6 days off for Pongal festival

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாள்கள் தொடர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14-01-25 செவ்வாய்க்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15-01-25, 16-01-25, 18-01-25 மற்றும் 19-01-25 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கல் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளை 17-01-25 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று முதல்வர், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17-01-25 (வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி 17ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 25ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.