தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2- வது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது.

TAMILNADU ERODE DISTRICT BHAVANI SHAKAR DAM WATER LEVEL RAISED

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியவுடன் உபரிநீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2018- ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு 1,300 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,148 கன அடியாக உள்ளது.