கரோனா பாதிப்பின் எண்ணிக்கையைக் கொண்டு மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்துள்ளது தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை. அதன்படி, கடைசி 4 நாட்களில் ஒரு மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 15- க்கு மேல் இருந்தால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாகவும், கடைசி 14 நாட்களில் ஒரு மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 15- க்கும் குறைவாகவோ (அல்லது) கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தாலோ அந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாகும். கடைசி 28 நாட்களில் ஒரு மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 0 ஆக இருந்தால், அந்த மாவட்டம் பச்சை மண்டலமாகும்.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு குறித்த பட்டியலை மாவட்டங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம். அதன்படி இந்தியாவில் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருப்பூர், நாமக்கல், தஞ்சை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகும். மேலும் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மணடலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.