தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பின்பு சொந்த ஊருக்குத் திரும்பினார்.இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் அந்த நபருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி இன்று (04/04/2020) காலை 07.44 மணிக்கு இறந்தார்.உயிரிழந்த நபர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
கரோனாவால் இறந்தவரின் உடலை விழுப்புரத்திற்கு கொண்டுவந்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியைக் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஏற்கனவே மதுரையில் ஒருவர் கரோனாவுக்கு இறந்த நிலையில் தற்போது விழுப்புரத்தில் ஒருவர் இறந்துள்ளார்.மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கனவே இறந்த நபருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருந்தது.
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.இதில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments