Skip to main content

"முகமது நபி குறித்து தவறாக பேசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்"- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

TAMILNADU CONGRESS COMMITTEE PRESIDENT KS Alagiri

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் முகமது நபியைத் தவறாகப் பேசியதைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று (28/06/2022) இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி  முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களும் மொழிகளைப் பேசுபவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. குஜராத்தில் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை ஆகி உள்ளனர். ஆனால், அங்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுத்து பொதுமக்களை பாதுகாத்த காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்? இந்தியாவில் 35 கோடி சிறுபான்மை மக்களும் 25 கோடிக்கும் மேல் தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா?

 

மோடி அரசின் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பது சாத்தியப்படுமா? முகமது நபியை அவதூறாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் நபிகள் குறித்து நுபூர் சர்மாவைப் பேச வைத்தது ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்பின் பின் புலத்தில் தான் இவர்கள் பேசுகிறார்கள். அக்னிபாத் திட்டம் மோடி அரசின் ஒரு தவறான முன்னுதாரணம் திட்டம், 4 ஆண்டுகளில் துப்பாக்கியை துடைக்கத்தான் கற்றுக்கொள்ள முடியும். இளைஞர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து வாக்குச்சாவடியில் அடியாட்களாக மாற்றும் திட்டம் தான் இந்த அக்னிபாத்.

 

தற்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலை இல்லை. இந்த நிலையில், இவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை கட்சியாக உள்ளது. அதனால் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கூட, அவர்களால் கண்டிக்க முடியவில்லை. நடராஜர் கோயில் குறித்து அவதூறாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி தேவைப்பட்டால், போராட்டத்தில் ஈடுபடும். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் பெட்ரோல் விலை குறைப்பு, வடிகால் வாய்க்கால்கள் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 

 

நபிகள் குறித்து தவறாக பேசியதை அனைத்து சமூகமும் கண்டிக்க வேண்டும். அந்த வகையில்  இஸ்லாமியர்கள் அல்லாத கிறிஸ்தவராகிய அருட்தந்தை சுபாஷ் சந்திரபோஸ், இந்து வாகிய நான், திருமா, தமிமுன்அன்சாரி உள்ளிட்டத் தலைவர்கள் இன்று நடைபெறும் இந்த பொதுகூட்டத்தில் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் இதயதுல்லா, தமிழ்நாடு வக்பு போர்டு தலைவர் அப்துல் ரகுமான்,காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் மக்கின், மூத்த நிர்வாகி ஜெமினி ராதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.