Skip to main content

"மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான்" - கே.எஸ்.அழகிரி!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

tamilnadu congress committee chief ks alagiri statement

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (06/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வந்த மக்கள் விரோத பாஜக, அதிமுக ஆட்சிகளுக்குப் பாடம் புகட்டுகிற வகையில், கடந்த மக்களவை தேர்தலில் 39 இடங்களில் 38இல் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 60 லட்சம் வாக்குகள் அதிகமாக அளித்து தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வெற்றிபெறச் செய்தனர்.

 

அதையொட்டி சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றிபெறச் செய்து, தமிழகத்தில் நடைபெற்று வந்த பாஜக ஆதரவுபெற்ற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு, திமுக தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ளது. அனைத்து நிலைகளிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துவந்த தமிழக மக்களுக்கு விடியல் ஏற்படுகிற வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று நல்லாட்சியை அளிக்க இருக்கிறார். இத்தகைய முடிவை அளித்த தமிழக மக்களை இந்திய நாடே பாராட்டி வருகிறது.

 

இந்நிலையில், திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி யார் என்று ஊடகங்களின் மூலமாகப் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையான கள நிலவரத்தை மூடிமறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி என்று ஒரு சில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 20 லட்சம் ஆகும். இதன்படி ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெற்ற சராசரி வாக்குகள் 80 ஆயிரம். அதேபோல, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து 30 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன்படி, நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் பெற்ற சராசரி வாக்குகள் 13 ஆயிரம் மட்டுமே. எனவே, 25 இடங்களில் போட்டியிட்டு,18 இடங்களில் 72 சதவிகித வெற்றிபெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா? ஆனால், ஒரு தொகுதியில் சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா? எது பெரிய கட்சி? 

 

இதனடிப்படையில் தமிழக அரசியலில் தொகுதிகளில் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு கட்சியின் பலத்தைக் கணக்கிடும்போது, 234 இடங்களில் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பலத்தைக் கணக்கிடுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

 

மூன்றாவது அணி என்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் இதுவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. ஓர் அரசியல் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பதற்காகவே போட்டியிடுகிறது என்று சொன்னால், அது நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்க முடியும். தேர்தலில் வெற்றிபெறுகிற நோக்கம் இல்லாமல், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போட்டியிடுவதற்காகவே தவறான தேசவிரோத கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களை ஈர்ப்பதற்கு சீமான் மேற்கொள்கிற அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்துகொண்டு தெளிவுபெறுவார்கள்.

 

எனவே, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யமாக இருந்தாலும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் கூட வெற்றிபெற முடியவில்லை என்றால், தாங்கள் செல்கிற அரசியல் பாதை குறித்து மறுசிந்தனை செய்ய வேண்டுமே தவிர, புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை மூன்றாவது பெரிய கட்சி என்று அழைப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” - கே.எஸ்.அழகிரி

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

"Biggest corruption has taken place in Tamil Nadu"- KS Alagiri

 

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 

இன்று சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியும் ஊழலும் நடைபெற்றுள்ளது. ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 2600 கோடி ரூபாய்க்கும் மேல் மிகப்பெரிய முறைகேடும் ஊழலும் நடந்துள்ளது. இந்த ஊழலில் அரசியல் பின்னணி உள்ளது. இது நிதி நிறுவனம் செய்துள்ள ஊழல் அல்ல. இதற்குப் பின்னால் மத்தியில் ஆளும் கட்சி உள்ளது. பாஜக இதற்குப் பின்னால் உள்ளது. அதானி விவகாரங்களுக்குப் பின் பாஜக உள்ளது போல் ஆருத்ரா விவகாரத்தின் பின் தமிழ்நாடு பாஜக உள்ளது. 

 

அண்ணாமலையுடன் நிதி நிறுவன அதிபர் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதற்காக சொல்லவில்லை. நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மூன்று பேரை அழைத்து விசாரித்தோம். அவர்கள், ‘பாஜகவின் ஆதரவு இதில் உள்ளது, நிறுவனத்தின் உரிமையாளர் பாஜகவில் பொறுப்பில் உள்ளார். அண்ணாமலையுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. இந்த காரணங்களால் இந்த நிறுவனம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் முதலீடு செய்தோம். ஆனால், இன்று அவர்கள் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள்’ எனக் கூறினார்கள்.

 

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை நேரடியாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அவர்கள் விசாரிக்க வேண்டும். வழக்கு போட வேண்டும் எனச் சொல்லவில்லை. விசாரித்தால் தான் உண்மை கிடைக்கும். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு புகலிடமாக பாஜக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

‘ராகுல் காந்தியின் 4 கேள்வியும்; மத்திய அரசின் நடவடிக்கையும்’ - கே.எஸ். அழகிரி ஆவேசம்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

Rahul Gandhi's 4 questions; Central Government's action' KS Azhagiri is obsessed

 

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை அறவழிப் போராட்டம் நடைபெற்றது. 

 

போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அராஜகத்தை மோடி அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்களை கேள்விக் கணைகளால் ராகுல் காந்தி துளைத்தெடுத்து வருகிறார். பதில் சொல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் இறங்குகிறார்கள். இந்த நாடு ஜனநாயக நாடு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ள நாடு. எந்த தவறான விஷயங்களையும் அவர் சொல்லவில்லை. உண்மைக்கு புறம்பான விஷயத்தை அவர் செல்லவில்லை. கர்நாடகத்தில் எப்போது பேசினார் என்று குஜராத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கு தொடுத்தவரே வழக்கை நிறுத்தி வைக்கிறார். அதன் பிறகு நீதிபதி மாற்றப்படுகிறார். வேறு நீதிபதி வந்த பிறகு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் நடந்துள்ளது. 

 

பிரச்சனை என்ன. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதுதான் பிரச்சனை. பொதுவெளியில் அவர் எவ்வளவு பேசினாலும், மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் மோடிக்கு உள்ளது. அந்த அவசியத்தை செய்தால் பிரச்சனை வரும் என்பதாலும், உண்மை வெளிப்படும் என்பதால் பேசத் தயங்குகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எதிர்க்கட்சிகள் பேச வேண்டும். ஆளும் கட்சி பதில் அளிக்க வேண்டும். எதிர்க்கட்சியே பேச அனுமதி மறுப்பது என்பது என்ன பொருள். மோடி  வெளி நாடு செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் அதானி உங்களுடன் வருகிறாரே? இயல்பா வருகிறாரா? வேறு என்ன காரணம் என்று கேள்வி கேட்டார். இரண்டாவது கேள்வியாக நீங்க போய் வந்த பின்னர் அதானி அங்கு போகிறாரே? மூன்றாவது கேள்வி ஒரு நாட்டிற்கு போய் வந்தவுடனேயே அந்த நாட்டில் அதானிக்கு வியாபாரம் ஒப்பந்தம் கிடைக்கிறதே. அவருக்கு மட்டும் கிடைப்பது எவ்வாறு என கேள்விகளை ராகுல் எழுப்பினார். நடைமுறைக்கு இல்லாத நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது. அந்த பணம் யாருடைய பணம். எப்படி வந்தது என ராகுல் கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்வது அவசியம்.

 

அதற்காக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை நுழைய விடமாட்டோம் என்பது எந்த விதத்தில் நியாயம். இது ஜனநாயகமா? ஹிட்லர் இதுதான் செய்தார். இன்று மோடியும் அதை செய்கிறார். பாஜக தனது புதை குழியை தோண்டிக் கொள்வதில் மிக ஆர்வமாக உள்ளது. மோடியும், காங்கிரஸ் கட்சி அவருக்கு புதை குழி தோண்டுகிறது என அதை ஒப்புக் கொண்டுள்ளார். ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல. விளையாட்டு பிள்ளை அல்ல. வாழ்க்கையில் பலவற்றை துறந்து அரசியலுக்கு வந்துள்ளார். எதையும் எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார். மகாத்மா காந்தி பிரதமராக, குடியரசு தலைவராக இருந்தாரா? அமைச்சராக இருந்தரா? ஆனால் அவர் சொன்னதை தான் இந்தியா பின்பற்றியது. அந்த இடத்தில் தற்போது ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு பதவி முக்கியம் இல்லை. எம்பி பதவி மக்களால் கொடுக்கப்பட்டது. தனி மனிதர்கள் அதனை பிடுங்குகிறார்கள். அதனை எதிர்கொள்ள தயார். மக்கள் மன்றத்தை சந்திக்க தயார். நீதிமன்றத்தை சந்திக்க தயார். அவருடைய இந்திய ஒற்றுமை பயணம் கட்சியினரால் தொடங்கப்பட்டு, பொதுமக்களால் நடத்தப்பட்டது. இதை பார்த்து பாஜக அச்சப்படுகிறது. அதன் விளைவுதான் இவர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

 

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் எங்களுடன் இல்லை. ஆனால் அதனை தவறு என கூறியுள்ளார்கள். பிரசாந்த்  கிஷோர் இது அதிகபட்ச தண்டனை எனக் கூறியுள்ளார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. முதல் கட்டமாக அறப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழி நடத்துகிறது. அதன் பிறகு சாலை மறியல், ரயில் மறியல், ஒவ்வொரு வட்டாரங்களிலும் தெரு முனை பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். நாங்கள் இதனை மக்கள் இயக்கமாக மாற்றி, காங்கிரஸ் தொண்டர்கள் மக்களிடையே சென்று கொண்டு சேர்ப்போம்” என்று பேசினார்.