மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களும் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முதல்வரின் கடிதத்தில், மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறாதது வியப்பளிக்கிறது. மத்திய அரசின் குழுவில் தமிழகம் உள்பட தென்மாநிலங்களைச் சேர்ந்த எந்த அறிஞர்களும் இடம் பெறவில்லை. இந்தியாவின் தொன்மையைக் கண்டறியும் கலாச்சாரக்குழுவில் தமிழ் அறிஞர்களும் இடம்பெற வேண்டும். நீண்ட நெடும் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் குழுவில் சேர்க்க வேண்டும். உலகில் நீடிக்கும் தொன்மையான நாகரீகங்களில் தமிழ் நாகரீகம் முக்கியமானது. தமிழ் கலாச்சாரம் இல்லாமல் இந்தியக் கலாச்சாரம் முழுமை பெறாது. மேலும், கடந்த ஆண்டு பிரதமர் மாமல்லபுரம் வந்தபோது தமிழ் கலாச்சார அடையாளங்களைக் கண்டு வியந்ததை தமிழக முதல்வர் பழனிசாமி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.