Skip to main content

'பெரிய நாடுகள் கூட திணறுகின்றன'- முதல்வர் பழனிசாமி பேச்சு!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020


 

tamilnadu cm palanisamy press meet in coimbatore district

 

கோவையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியதால் கோவை மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது. கரோனா பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோவையில் நாளொன்றுக்கு இரண்டாயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நீர் பாசனம் போன்ற விவகாரங்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் திட்டப்பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும். 

 

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றால் ஸ்டாலின் அதையும் குறைகூறுகிறார். சோதனையான நேரத்தில் அரசுக்கு ஆதரவு அளிக்காமல் தவறான குற்றச்சாட்டை கூறுகிறார் ஸ்டாலின். நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் ஸ்டாலின். கரோனாவுக்கு ஒரே மருந்து அனைவரும் கட்டுப்பாடுடன் இருப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

 

தான் அரசியலில் இருப்பதை தெரிவிக்கவே நாள்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் ஸ்டாலின். அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயல்படுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். எந்த மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்டாலின் போல் அரசியலுக்காக செயல்படவில்லை. கரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஸ்டாலின் என்ன ஆலோசனைகளை கூறியிருக்கிறார்? எந்த வழிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் திமுகவினர் நிவாரண உதவி வழங்கியதால் தொற்று அதிகரித்துள்ளது. அங்கொன்றும், இங்கொன்றும் விளம்பரத்திற்காக திமுக நிவாரணம் வழங்கியது. ஸ்டாலின் உத்தரவை ஏற்று நிவாரணப் பணிகள் செய்த ஒரு திமுக எம்எல்ஏவை நாம் இழந்திருக்கிறோம். மருத்துவ நிபுணர் குழு அறிவுரைகளைப் பின்பற்றியிருந்தால் ஒரு எம்எல்ஏவை இழந்திருக்க அவசியமில்லை. அதிகாரிகள் மூலம் நிவாரணப்பணிகளை திமுக வழங்கியிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். 

 

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கூட திணறுகிறது, ஆனால் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. 90 நாட்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால்தான் கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையில் இல்லை. கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது பற்றி முழு அறிக்கை கிடைக்கவில்லை. வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கனிவாக நடந்துக்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும்". இவ்வாறு முதல்வர் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.