tamilnadu cm palanisamy press meet

சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரியில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் கரோனாவைத் தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தமிழகத்தில் ஆரம்பக் காலத்தில் கரோனா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. சென்னையில் ஏன் முழுமுடக்கம் என சில கட்சித் தலைவர்கள் கேட்கிறார்கள்; கரோனா தொற்று பரவலைத் தடுக்கவே, மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது, மக்களை சிரமப்படுத்துவதற்கு அல்ல; கரோனாவைத் தடுக்கவே... கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். கரோனாவை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்த்தால் கரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும். நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 83 பரிசோதனை மையங்கள்உள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக 8.27 லட்சம் பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. தினமும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. கரோனா இல்லை என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனே மறுத்துள்ளார். கரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்; தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களால் தான் பிற மாவட்டங்களில் தொற்று ஏற்படுகிறது. வெளியூர் செல்லாமல் சென்னை மக்கள் இங்கு இருந்தால் தான் பரிசோதனை செய்ய முடியும். சென்னையில் நேற்று ஒரே நாளில் நடந்த 527 காய்ச்சல் முகாம்களில் 900 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது." இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த ஆய்வின் போது முதல்வருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.