முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்கக்கோரி, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்டதற்காக, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில், ராதாகிருஷ்ணன் ஆகிய 7 பேருக்கு எதிராக,.1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வர் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்ததோடு, மனுவுக்கு பதிலளிக்க, மேத்யூ சாமுவேல் உள்பட ஏழு பேருக்கும் உத்தரவிட்டது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்கக்கோரி, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, P.T.ஆஷா, முதல்வர்எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், முதல்வர் பழனிசாமி மனுவுக்கு பதிலளிக்க, மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 23- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.