Skip to main content

"மாநகராட்சிகளில் கரோனா கட்டுக்குள் வரவில்லை"- முதல்வர் பழனிசாமி பேச்சு!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

tamilnadu cm palanisamy discussions with all districts collectors


கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள், காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 


அப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சியில் நோய் கட்டுக்குள் வந்தாலும் மாநகராட்சிக்குள் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் உணவு இல்லை என்ற நிலை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பாராட்டுகள். தினமும் சராசரியாக 7 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவருந்தி வருகின்றனர். காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். ரேஷன், காய்கறி கடைகளில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தனிநபர் இடைவெளியை ஏற்படுத்த தன்னார்வலர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். டோக்கன் கொடுப்பதுடன் ரேஷன் பொருள் தரும் நாள், நேரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 
 

 

tamilnadu cm palanisamy discussions with all districts collectors


விவசாயப் பணிகளுக்குப் பொதுமுடக்கத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தத் தடையும் செய்யக்கூடாது. முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதிக ஆட்கள் இருந்தால் 2 ஆக அல்லது 3 ஆக பிரித்து பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர்க்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்குப் பணி தரலாம். 
 

http://onelink.to/nknapp

 

கரோனா குறைந்த பச்சைப்பகுதியில் தொழில் தொடங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர்கள் செயல்படலாம். சிவப்பில் இருந்து ஆரஞ்சு, ஆரஞ்சில் இருந்து பச்சைப் பகுதிக்கு வந்தால்தான் தொழில்கள் இயங்க முடியும்". இவ்வாறு முதல்வர் பேசினார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
PM Modi's conversation with online sportspersons

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் டெல்லியில் நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் (வீரர்கள்) பிரதமர் மோடி இன்று (13.04.2024) கலந்துரையாடினார். இந்தியாவில் கேமிங் துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்கில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் 7 ஆன்லைன் கேமர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “கேமிங் துறையைச் சேர்ந்த இளைஞர்களுடன் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்க விரும்புவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமலாக்கத்துறை சம்மன்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Enforcement Department Summons; Supreme Court action order

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்ககளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழஙக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.