காந்தி மற்றும் காமராஜருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டிப் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தமிழக முதல்வரின் மற்றொரு ட்விட்டர் பதிவில், "தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசரின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.