


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18/12/2021) செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் நடைபெற்ற விழாவில், உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான 'இன்னுயிர் காப்போம்'- நம்மைக் காக்கும் 48 திட்டத்தை 609 மருத்துவமனைகளில் தொடங்குவதன் அடையாளமாக, 18 மருத்துவமனைகளில் பிரதிநிதிகளிடம் அதற்கான கடவுச்சொற்களை வழங்கினார். மேலும், 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் காணொளி குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.
அதேபோல், ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனைக்குச் சென்று, அம்மருத்துவமனையில், சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரங்கநாதன் என்பவரைச் சந்தித்து, உடல்நலம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர்/ சிறப்புப் பணி அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குநர், ஆதிபராசக்தி அறக்கட்டளைத் துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அரசு உயரதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.