
அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரான பாடலாசிரியர் புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அ.தி.மு.க.வின் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் உடல்நல குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
திராவிட கொள்கைகளின் மேல் பற்றுக்கொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவைத் துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும், தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க.வினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.