ஜூன் 28- ஆம் தேதி முதல் விரைவுப் பேருந்து சேவை!

TAMILNADU BUS SERVICE RESUMING FOR 27 DISTRICTS

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, கரோனா பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் வகை 2-ல் உள்ள கடலூர், கன்னியாகுமரி, தருமபுரி, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வரும் ஜூன் 28- ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தைத் தொடங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தவிர வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே நகரப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 27 மாவட்டங்களில் வரும் ஜூன் 28- ஆம் தேதி அன்று காலை 06.00 மணி முதல், அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் மற்றும் சார்புடைய போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம் 11 மாவட்டங்களைத் தவிர்த்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் இடையே பேருந்து சேவைக் கிடைக்கும்.

இதனிடையே, "ஜூன் 28- ஆம் தேதி முதல் 27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் 9,333 பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் வருகைக்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

bus service Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe