
"மோடி யார் கையை உயர்த்தினாலும் அவர்களுக்கு வெற்றிதான். ராகுல் போன இடமெல்லாம் தோல்விதான். ஏழை மாணவர்களின் வளர்ச்சியைத் தடுத்து திமுக நவீனத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறது" என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில், "சென்னை வந்த பிரதமருக்கு அதிமுக - பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் 25ஆம் தேதி கோவைக்கு பிரதமர் வருகை தருகிறார். 21ஆம் தேதி சேலத்திற்கு ராஜ்நாத்சிங் வருகை தருகிறார். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். இந்தத் தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தேர்தலை, பாஜகவிற்கு முக்கியத் தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றிபெறும். அதிமுக - பாஜகவின் கூட்டணி உறுதிசெய்யப்பட்ட கூட்டணி. இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் நுழைவார்கள். ஸ்டாலினால் எப்போதும் ஆட்சி அமைக்க முடியாது. திமுக தேசிய வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்பதால் பொதுமக்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஸ்டாலினின் கனவு கனவாகவே இருக்கும். திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஏன் குறைதீர்கூட்டம் நடத்தவில்லை. இப்போது குறைதீர்கூட்டம் நடத்துவது என்பது அரசியலுக்கானது, தேர்தலுக்கானது.
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக நவீனத் தீண்டாமையைக் கையில் எடுத்துள்ளது. கேஸ் விலை, பெட்ரோல் விலை குறையும். மோடி கையைத் தூக்கிப் பிடித்த அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர். தமிழகம் வந்த ராகுல்காந்தி ஸ்டாலின் குறித்து எங்கும் பேசவில்லை. ராகுல் செல்லும் இடமெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது. தலைசிறந்த ஆட்சியைத் தந்த ஜெயலலிதாவுக்குப் புகழஞ்சலி செலுத்துவதில் தவறில்லை. திமுக கூட்டணி உடையும் நிலை உள்ளதால், அதிமுக கூட்டணியிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. வேளாண் சட்டத்தை எந்த விவசாயிகளும் எதிர்க்கவில்லை. விவசாயிகள் மோடியை தோழனாகப் பார்க்கின்றனர். 'கோ பேக் மோடி' என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே வருகைதரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் அநாகரிகம்.
அதனைத் தாண்டி 'வெல்கம் மோடி' என்ற நிலை உருவாகியுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் திமுகவினரும், தேசவிரோதிகளும் தான் உள்ளனர். மோடி - எடப்பாடி சந்திப்பு குறித்து எனக்குத் தெரியாது. நாராயணசாமி செயல்பாடு பிடிக்காமல் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர். சசிகலா தனது நிலைப்பாட்டை அறிவித்த பின் தங்களது கருத்தைக் கூறுவோம்" என்றார்.