தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயமில்லை.

Advertisment

கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, சென்னை மாநகரகாவல் ஆணையரிடம் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கமலாலயத்தின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

tamilnadu bjp office incident police investigation

பா.ஜ.க. அலுவலகம், அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் காவல்துறையின் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நீட் தேர்வை ஆதரித்து அண்ணாமலை பேசியதைக் கண்டித்து பெட்ரோல் குண்டு வீசியதாகத் தெரிவித்ததாக தகவல்கள்கூறுகின்றன.

இதனிடையே, நாகை மாவட்டம், திருப்பூண்டியில் பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராம் என்பவரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த கீழையூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காருக்கு தீ வைத்தது யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.